Wednesday, November 28, 2007

கதை உருவான கதை


ப்படி கதை எழுதுறீங்க? எங்க இருந்து இந்த ஐடியா எல்லாம் கிடைக்குது? ஒரு கதை எழுத எவ்வளவு நேரம் ஆகும்? இதுவெல்லாம் என்னைப் பார்த்து நண்பர்கள் கேட்ட கேள்விகள். உடனே தோன்றியது, சரி கதை உருவான கதையை எழுதலாம்னு, ஆங்கிலப் படத்தில கடைசியில் காண்பிப்பார்களே, எப்படி படத்தை எடுத்தாங்கன்னு (Making) அது போல என்னோட கதைகளின் கருமூலத்தை எழுதலாம்னு முடிவு பண்ணினேன். பொதுவாகவே, நமக்கு தெரிஞ்ச ஒரு விசயத்தை அடுத்தவங்களுக்கு நல்லா புரிஞ்சிக்கிற மாதிரி ஜனரஞ்சகத்தோட சொல்றதோ இல்ல எழுதறதுங்கிறதோ ஒரு பெரிய கலை. என்னுடைய வேலை நிமித்தமா நான் பல முறை "White Papers", "Solution Proposal" எல்லாம் எழுத வேண்டியிருக்கும். வாடிக்கையாளர்களும், மேலாளர்களும் தெளிவா புரிஞ்சிக்கிற மாதிரி நம்ம நினைக்க கூடிய செய்தியை முறையா, தெளிவா எடுத்து சொல்ல வேண்டியது ரொம்ப அவசியமானது. ஒண்ணுமில்ல, ஒரு சிரிப்ப கூட (comedy, joke) இன்னொருத்தருக்கு நாம சொல்லணும்னா அதை நல்லா, முறையா சொல்ல வேண்டிய விதத்தில் எடுத்து சொல்லவோ அல்லது எழுதவோ செய்தாதான் அது சரியா போயி சேரும், மற்றவர்களும் கேட்டுட்டு சிரிப்பாங்க, இல்லைன்னா, ஓ அப்படியான்னு கொட்டாவிதான் விடுவாங்க. அப்படிப்பட்ட இந்த எழுத்து கலையை எனக்குள்ள வளர்த்துக்கணும் அப்படிங்கற ஒரு ஆர்வக் கோளாறுதான் நான் எழுத ஆரம்பிச்ச இந்த பதிவுகள் (Blog). கதை, கவிதை இரண்டுமே எழுதி இந்த கலையை வளர்த்துக்கணும்னு ஆசை ரொம்ப. ஆனாப் பாருங்க, இந்த கவிதை எழுதறது கொஞ்சம் கஷ்டமான வேலை. தலை வலியே வந்திரும். சில சமயம் நான் கவிதைன்னு சொல்லி நண்பர்களிடம் நல்லா வாங்கிக் கட்டிக் கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு. கதை எழுதறது கவிதையைக் காட்டிலும் கொஞ்சம் சுலபமானதுங்கிறது என்னுடய கருத்து. கதை எழுத அடிப்படையா ஒரு மூலக்கருத்து வேணும். சிறுகதைகளில் பெரும்பாலும் ஒரு முடிச்சி இருக்கும், கடைசியில் முடிச்சி அவிழ்ந்து ஒரு செய்தியும் இருக்கும். நான் எழுதிய கதை எல்லாவற்றிலுமே என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களும், நான் கேள்விப்பட்ட செய்திகளும் மையக் கருத்தா இருந்ததுங்கறது ஒரு மறுக்க முடியாத உண்மை. கற்பனையும் கால் பகுதிக்கு இருக்கும். அதை உங்க எல்லோருடனும் பகிர்ந்துக்கணும் அப்படிங்கற ஆவலில் உருவானதுதான் இந்த "கதை உருவான கதை".

(முடிந்த வரை ஆங்கிலம் கலக்காமல் எழுத முயற்சி செய்கிறேன், மீறினால் பொறுத்தருள்க!, ஆங்காங்கே எழுத்துப் பிழை இருப்பினும் மன்னிக்கவும் (blame editor)).


1. உறவுகள் - அமெரிக்காவில் "Thanks Giving" சமயத்தில் எழுதியது. "Thanks Giving" ன்னா ஒரு குடுமபத்தில் உள்ள உறவுகள், அம்மா, அப்பா, உடன் பிறந்தவர்கள், மற்றும் நண்பர்கள் எவ்வளவு தூரத்தில இருந்தாலும் இந்த நாள்ள ஒண்ணா கூடி விருந்த "Turkey" யோட "Special"-ஆ சாப்பிடறது ஒரு சம்பிரதாய பழக்கம். அதுவே "உறவுகள்"-ங்கிற தலைப்புக்கு காரணமாச்சு. எனக்கு ஒரு அண்ணன் இருக்கார். நான் இரண்டாவது ஆளு. சின்ன வயசில எங்களுக்குள்ள வந்த சண்டை (வடை, போண்டா-வுக்காக மல்லுகட்டினோம்) பெருசாயி, அதுல அவர நான் மாட்டி விட்டு கடைசில அவருக்கு எங்கப்பாவிடமிருந்து அடி கிடைக்கற அளவு நிலைமை மோசமாக எனக்கு ரொம்ப கஷ்டமாவும் வெட்கமாவும் இருந்தது. அப்ப எங்கப்பா நடத்தி வச்ச சமாதான பஞ்சாயத்தும், கூறிய அறிவுரைகளும், சமீபத்தில பார்த்த தமிழ் திரைப்படங்களின் பாதிப்பும்தான் இந்தக் கதையின் மையக் கருத்து.

2. சரவெடி - தீபாவளி சமயத்தில எழுதப்பட்ட கதை. நண்பர் கரண் தலைப்பை குடுத்து கதை எழுத சொன்னார். சின்ன வயசில பட்டாசு வாங்க நான் போடற கணக்கும், எங்க குடும்பத்தில காட்டுற கண்டிப்பும், நம்மலால முடியாததை, அடுத்தவங்க வெடிக்கறத பார்த்து பண்டிகையை ஓட்டறதுங்கிற சொந்த அனுபவம்தான் கதையோட மையக் களம். கொஞ்சம் சமுதாய முன்னேற்ற சிந்தனையோட குண்டு வெடிப்பு ட்விஸ்டு வச்சி நான் விட்ட புஸ்வானம்தான் இந்த வெடி.

3. மூலதனம் - என் கல்லூரி படிப்பை முடித்து வேலைக்காக பல இடங்களில் அலைந்து திரிந்தேன், மந்திரியின் பி.ஏ-விடம் எல்லாம் என்னுடைய "Resume" குடுத்து வைத்தேன், கடைசியில் ஊருக்கு வந்தேன். எங்க தோட்டம் உள்ள கிராமத்துக்கு போகணும்னா ஒரு நாளைக்கு ரெண்டே பஸ்தான், மற்ற வேலைகளில் நடராஜா சர்வீஸ், அப்படி இல்லைன்னா வாடகை சைக்கிளோ அல்லது அந்த வழியாக போகும் டிராக்டர் சவாரி. இந்த கிராமத்து சூழலே கதைக்கு களமாச்சு. எங்கப்பா என் அண்ணன் கூடப் படிச்சு கம்பனி நடத்தறவரோட விலாசத்தை குடுத்து, போயி பார்த்துட்டு வரச் சொன்னார். அங்க போயி, அவரு தொழில் நடத்தற விதத்தைப் பார்த்தேன், அதே போல நாம் ஏன் சுயமா பண்ணக்கூடாதுன்னு நினைச்சு, பின்னால "Software Consultancy" ஆரம்பித்து கிட்டத்தட்ட 70 Clients, 5-6 Employees மேல நிர்வகிக்கற அளவுக்கு வளர்ந்தேன். அந்த சுய அனுபவமும், கொஞ்சம் கற்பனையும்தான் இந்த கதைக்கு மூலதனமாச்சு. காசு சுண்டி விடற படம், ஐடியா வேற ஒண்ணுமில்ல, சிவாஜி இன்டெர்வல்தான்.

4. ஆயிரத்தில் ஒருவன் - ஆயுத பூஜைக்காக எழுதிய கதை. எங்க ஊர்ல பூஜையின் போது, நண்பர் ஒருவரின் லேத் பட்டறைக்கு சென்று பொரி விநியோகிப்பது வழக்கம். அது முடிந்து அடுத்து அச்சாபீஸ் நண்பர் அங்க போயிடுவோம். அது மட்டுமல்ல, ஒவ்வொரு பூஜைக்கும் ஒவ்வொரு மாதிரி அயிட்டம் இருக்கும். இந்த வருசம் பொரி குடுத்தா, அடுத்த வருஷம் சுண்டல்னு ஒரு வித்தியாசம் காட்டுவோம். அப்படி விநியோகிக்கும் போது, ரொம்ப முடியாதவங்க, ஏழைங்க, சின்ன பசங்க எல்லாம் பெரிய சாக்கு பையை எடுத்துகிட்டு வந்து வாங்கிட்டு போவாங்க. அப்ப தோணும், இவ்வளவு வாங்கி என்னடா பண்ணுவாங்கன்னு. எல்லாத்தையும் இவங்களே சாப்பிடுவாங்களா இல்ல யாருக்காவது குடுப்பாங்களா இல்ல வித்துருவாங்களான்னு. அப்படி சின்ன வயசில பார்த்து கிடைத்த அனுபவமும், கொஞ்சம் செண்டிமென்டையும் அள்ளித் தெளிச்சு உருவானவந்தான் இவன்.

5. பேட்டை துள்ளி - இது வித்தியாசமான ஒரு அனுபவம். 3 ஆண்டுகளுக்கு முன் ரம்ஜான் சமயத்தில் ஊருக்கு சென்ற போது என் நெருக்கமான நண்பர் முகமது ரபி தனது பகல் ரம்ஜான் விரதத்தை கலைத்து அவர் வீட்டில் விருந்து குடுத்தார். அப்போது நான் அவரிடம் கேட்டேன், ஏன் இன்னிக்கு விரதத்தை சீக்கிரம் முடிச்சிட்டேன்னு, அதுக்கு அவர் சொன்னார், அல்லாவே சொல்லியிருக்காரு தேடி வந்த விருந்தினரை மகிழ்ச்சியா உபசரிச்சிட்டு உன் குடும்ப கடமை எல்லாம் முடிச்சிட்டு எங்கிட்ட வான்னு. அதனால உன்னை முதல்ல கவனிக்கிறேன்னு என்னிடம் விளக்கம் சொன்னார். இந்த நெகிழ்ச்சியான அனுபவமும், என்னுடைய சபரி மலை பயண அனுபவமும், ஜாதி மத பேதமற்ற சமுதாயம் காண நான் கொண்ட பேராவலிலும் துள்ளி வந்ததுதான் இந்த கதை.

6. மேஜர் மைனர் - இது விநாயகர் சதுர்த்திக்காக எழுதப்பட்டது. செய்திதாளில் வந்த செய்தி, எந்த மாவட்ட கலெக்டர் என நினைவில்லை, ஈரோடு என நினைக்கிறேன் (என் கல்லூரியில் படித்த எனக்கு நன்கு அறிமுகமான எனக்கு ஒரு வருட ஜூனியர்தான் இப்போது ஈரோடு கலெக்டர்). அவர் விநாயகர் சதுர்த்தியை அமைதியாக எந்த கலவரம் இன்றி கொண்டாடவும், சிலை கரைப்பு பணிகளை எப்படி, எங்கு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி செய்தி வெளியிட்டிருந்தார். அந்த செய்தியும், கொஞ்சம் சிறுகதைக்கே உண்டான டிவிஸ்டும் கலந்து மேஜரானவந்தான் இந்த மைனர் (கதை).


7. ஊருக்குதான் உபதேசம் - இது சுவாரசியமான விசயம். பா.ம.க தலைவர் ராமதாஸ் அவர்கள் தன்னுடைய பசுமை டி.வி யின் ஆண்டு விழாவில் தமிழ் எப்படி எல்லாம் உபயோகிக்க வேண்டுமென வலியிறுத்தி பேசிய பேச்சு. சோறுன்னுதான் சொல்லணும் சாதம்னு சொல்லக் கூடாது, சாதம் வட மொழிச்சொல் என்று. படித்தவுடன் சிரிப்பு வந்தது. இவர் பேரிலேயே "தாஸ்" என்ற வடமொழி சொல் உள்ளதே அதற்கு அவர் என்ன பண்ணுவார் என்று. பல அரசியல்வாதிகள் தன் சுயநலத்திற்காக ஊருக்கு ஒரு விதியும் தனக்கு ஒரு விதியும் வைத்து பொதுமக்களை சுரண்டுகிறார்களே என்ற ஆதங்கத்தில் வந்த உபதேசம்தான் இது.

8. தவிப்பு - இது எனது முதல் கதை. யோசித்து யோசித்து கதை களம் பிடித்தேன். ஒரு எதிர்பாராத ட்விஸ்ட் வைக்க வேண்டுமென ரொம்பவே முயற்சி செய்தேன். கல்லூரியில் படிக்கும் போது ஆண்டு விழா மலர் வெளியிடுவார்கள். அதற்கு விளம்பரம் பிடிக்க நாங்கள் செல்வது வழக்கம். அப்படி போன இடத்தில் ஒரு பெண் காரியதரிசியிடம் நடையாய் நடந்து, அவர் இன்னிக்கி தரேன், நாளைக்கு தரேன்னு என என்னை அலைய விட்டு, நானும் ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்து கடைசில் நண்பன் சொன்ன ஐடியாவுடன் (ரெண்டு பெரிய விளம்பர கட்டம் வாங்கினா ஒரு சின்ன விளம்பர கட்டம் இலவசம்) சென்று ஒரு வழியாக விளம்பரம் பிடித்து முடித்தேன். அந்த தவிப்பின் பிரதிபலிப்புதான் இந்த தவிப்பு.


கதையைப் படித்த வாசக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

No comments: