Monday, December 17, 2007

இளைஞர் ஸ்டாலினின் கையில்?



தி.மு.க இளைஞர் அணி முதல் மாநில மாநாடு, அதுவும் 25 ஆண்டுகள் கழித்து நெல்லை நகரமே திணறும் வகையில் பிரமாண்டமாக நடத்தப்பட்டு உள்ளது. பலமுனைகளில் இருந்து பல(த்த) எதிர்பார்ப்புகள். ஸ்டாலின் முதல்வராக அறிவிக்கப்படுவாரா? கட்சியின் மூத்த தலைவர்கள் இந்த மாநாட்டை எப்படி கையாள்கிறார்கள் என பலவிதமான கண்(கள்)ணோட்டம். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்காமல் "கமா" போட்டது போல் முதல்வரின் "காலம் நிறைய இருக்கிறது .. நீங்கள் எதிர்பார்ப்பது விரைவில் நடக்கும்" என்ற சூசக பேச்சு. 25 ஆண்டுகள் அரசியல் அனுபவம், கட்சியின் முக்கிய பொறுப்புகள், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், போராட்டம், சிறை என அத்தனை அரசியல் அனுபவங்களும் நிறைந்த தலைவர்தான் (இளைஞர்?) இன்றைய ஸ்டாலின். தாத்தாவாகியும், இன்றும் இளமையுடன், தினமும் நடைப்பயிற்ச்சி உடற்பயிற்ச்சி என உடலை டிரிம்மாக (தொப்பையுடன் பெருத்த உடலை உடைய பல அரசியல்வாதிகள் மத்தியில்) வைத்துக் கொண்டு ஆரோக்கியமாக வலம் வருபவர்தான் நம் ஸ்டாலின். அனத்து தகுதியும் வாய்ந்த ஒருவர் கட்சித் தலைமைக்கும், முதல்வர் பதவிக்கும் முற்றிலும் தகுதி பெற்ற ஒருவர் மக்களிடமும், கட்சிக்காரர்களிடமும், சொந்தங்களிடமிருந்தும் அங்கீகாரம் பெற நடத்தப்பட்ட பிரமாண்டமான கூ(த்து)ட்டம்தான் இந்த மாநாடு. இது தேவையா? இப்படித்தான் ஒருவர் தன் பலத்தை காண்பித்து அங்கீகாரம் பெற வேண்டுமா? இத்தனை தகுதி படைத்த இவருக்கே இத்தனை சிரமம் என்றால்? சாமான்யனுக்கு எப்படி?

வருடம் 2007-ல் தொழில்நுட்பங்களில் பல முன்னேற்றம் கண்டுள்ள நாம், அரசியல் மாநாடு என்ற பெயரில், பத்து லட்சம் பேரை திரட்டி நடத்தப்பட வேண்டிய அவசியம் என்ன? மாநாடு காண வந்த அனைவரும் சொந்த வேலையை விட்டு வந்திருப்பார்கள். எவ்வளவு பொருளாதார நஷ்டம்? எத்தனை உற்பத்தி பாதிப்பு? அரசும், ஆளும் கட்சியும் இதை கொஞ்சமாவது யோசித்ததா? தங்களது சொந்த பலத்தைக் காண்பிக்க பொதுஜனத்தை சூரையாடும் இந்த கட்சி மாநாடுகளின் சூசகம் எத்தனை இளைஞர்களுக்கு புரியப் போகுது? சினிமாவில் ஹீரோ வந்தாலும், கட்சிக் கூட்டத்தில் தன் தலைவரை பார்த்தாலும் ஆனந்தக் கண்ணீர் விடும் எத்தனை அப்பாவி இளைஞர்கள். தன்னை அறியாமல் வாய் விட்டு தொண்டை கட்ட தலைவர் மேடை ஏறும் வரை கத்தும் கடைநிலை தொண்டன் எத்தனைப் பேர்? இவர்களுக்கு மாநாடு என்ற பெயரில் கழகங்கள் காட்டும் கண்(கட்டு)காட்சிதான் இந்த மாநாடு. இதை எல்லாம் கற்பனையாக நான் எழுதுவதாக நினக்க வேண்டாம். கரை வேட்டி மட்டும்தான் நான் கட்டியதில்லை. கலைஞர் சேலத்திற்கோ, ராசிபுரத்துக்கோ வந்த போது (எங்கள் ஊரில் இரவு பஸ் இல்லாததால், வாடகை கார் எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் சென்று) மணிக்கணக்கில் காத்திருந்து தலைவரை பார்த்து கோசம் போட்டு ஆனந்தக் கண்ணீர் விட்ட கழக கண்மணிதான் நானும். அது மட்டுமல்ல, தேர்தல் சமயங்களில் சூரியன் சின்னம் வரைந்த அனுபவும், பூத்துகளில் நின்று கொண்டு வாக்கு சேகரித்த அனுபவமும் நிறைய உண்டு. அனைத்தும் மாயை, ஏமாற்று வேலை என்று நன்கு புரிந்துதான் இதை எழுதுகிறேன்.

இந்த நிலை மாற வேண்டும், நான் சிறுவயதில் செய்த தவறுகளையே திரும்ப (இப்போது) செய்து கொண்டிருக்கும் இளைஞர்களை மாற்ற வேண்டும், சிந்திக்க செய்ய வேண்டும். இளைஞர்களும், மாணவர்களும் தேர்ந்த களிமண் போன்றவர்கள், அதை செம்மையாக, பதமாக வடிவெடுத்தால்தான் நல்ல பாத்திரம் கிடைக்கும்.

ஸ்டாலின் அவர்கள் இதைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்குமா இல்லையா என எனக்கு தெரியாது. அனைத்து தகுதியும் வாய்ந்த தாங்கள் முதல்வராக ஆக எந்த கேள்வியும், சந்தேகமும் இல்லை. அதே சமயத்தில்,

கழகங்களின் கண்ணாமூச்சிகளில் இருந்து இந்த இளைஞர்களை விடுத்து வேறு வழி நடத்த செல்ல முடியுமா?
மாநாடு, கட்சி என்று வேலைக்கு செல்லாமல் திரியும் இளைஞர்களை நல்வழிப்படுத்த முடியுமா?
பேரணியில் நடந்து செல்ல தனிப்பயிற்ச்சி குடுக்கும் தங்கள் அமைப்பு அதை விட்டு தேர்ந்த விளையாட்டு துறையில் தனிப்பயிற்ச்சி குடுக்க முன் வருமா?
தமிழ்நாட்டை விட்டு வெளியில் வந்தால் "பெப்பே ..." மொழி தெரியாமல் விழி பிதுங்கும் இளைஞருக்கு பலமொழி கற்றுக் கொடுக்க உங்கள் ஆட்சி முன் வருமா?
இலவச மான்யம் என்ற பெயரில் வழங்கும் பிச்சையை நிறுத்தி நிரந்தர வருமானம் அளிக்கும் தொழிற்சாலைகள் தொடங்க வருமா?
கட்சி மாநாடு, பொதுக் கூட்டம் என்ற பெயரில் கூட்டம் சேர்க்காமல் (ஊடகங்கள் வழியாக) அவர்களை உங்களால் சென்று அடைய என்ன வழி என சிந்திப்பீரா?

..........இன்னும் பல கேள்விகள் இங்கு எழுப்பலாம். ஆனால், நான் கூற வந்ததின் அர்த்தத்தை சுருங்க சொல்லிவிட்டேன்.

மாநாட்டில், தங்கள் தலைவரும் தந்தையும் என்ன கூறினார்? தந்தை பெருமைபடும் வகையில் மகனாக, நல்ல தலைவனாக தாங்கள் இருப்பீர்கள் என நம்பிக்கை படக் கூறினார். அவர் எதை வைத்து கூறினார் என தெரியாது, ஆனால், இன்றைய இளைஞர்களை தங்களால் திருத்த முடியும், ஆரோக்கிய அரசியலை குடுக்க முடியும், ஒரு புதுமை "புரட்சியை" உருவாக்கி தங்கள் பெயருக்கேற்ப சரித்திரத்தில் இடம் பிடிக்க முடியும், அதைத்தான் நான் (எனைப் போன்ற) மற்றவரும் விரும்புவர்.

பதில் உங்கள் கையிலல்ல, "செயலில்" ........

Thursday, December 6, 2007

பனி மழையும் பருவப் பெண்ணும்


பனி மழை பூவாய் பெய்து
பரவிக் கிடக்கும் அழகு!
பருவப் பெண் பூப்பெய்து
பட்டாடை போர்த்தும் அழகு!

பகலவன் வரவைக் கண்டு
பளீரென மின்னி மறையும் அழகு!
இனியவன் வரவைக் கண்டு
இதயத்தில் மின்னலாய் தோன்றும் அழகு!

Monday, December 3, 2007

கி.பி. 2071


ரோஜர் சாமியப்பனின் காலை பிராண்டி எழுப்பினான். அதற்குள் விடிந்து விட்டதா? இப்பதான் படுத்த மாதிரி இருக்குது, ரோஜர் எழுப்புகிறான் என்றால் ஏதாவது முக்கிய செய்தி இருக்கும். அரைத் தூக்கத்தில் கண் விழித்து பார்த்தான். எதிர்பார்த்த மாதிரியே ரோஜர் அவனுடைய செல்லை கவ்விக் கொண்டு வாலாட்டிக் கொண்டிருந்தான். என்ன அவசரமோ என செல்லை வாங்கிப் பார்த்தான். அவசர வானிலை செய்தி, விவசாய கழகத்திலுருந்து அவசர செய்தி என பிளாஷ் செய்திகள் மின்னிக் கொண்டிருந்தது. பக்கத்திலுள்ள ஜாரிலிருந்து ஒரு ரொட்டித் துண்டை எடுத்துப் போட ரோஜர் வாலாட்டி நன்றி சொல்லியவாறே ஒடினான். என்ன செய்தியாக இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டே செல்லிலிருந்த ஒரு பட்டனை அமுக்க, தன் படுக்கை எதிரில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் லேசர் மூலம் ஒரு ஒளி சதுரம் உருவாக, முதல் செய்தியை படிக்க ஆரம்பித்தான். அடுத்த 24 மணி நேரத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ய ஆரம்பிக்கும், 3 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளது.


இது என்னடா வம்பா போச்சு, வயலில் நெற்கதிர் முதிர்ந்த தருவாயில் உள்ளது, நாளைக்குத்தானே ரோபோக்கள் மூலமா பயிரை அறுவடை செய்ய கம்யூட்டரில் புரோகிராம் பண்ணி வச்சிருக்கோம். இப்ப முதல்ல அதை மாத்தி, இன்னிக்கே வேலையை தொடங்கற மாதிரி புரோகிராம் பண்ணனும். சரி அடுத்த என்ன செய்தி இருக்கு என பார்த்தான். மோசமான வானிலையைக் காரணம் காட்டி நாளை மறுநாள் நடக்கவிருந்த விவசாய கழக மாநாட்டை இன்று காலையே நடத்த இருக்கிறார்கள். தக்காளி மற்றும் தேயிலை பறிக்கும் அதிநுட்பம் வாய்ந்த ரோபோக்களை தயாரித்து அறிமுகப்படுத்தும் அமைப்பில் இவன் பங்கு நிறைய இருந்தது. இவன் நேரில் சென்று அதை செய்முறை விளக்கம் அளிக்க ஏற்கனவே ஒத்துக் கொண்டிருந்தான். என்னடா, ஒரே நாளில் இத்தனை சிக்கலா என நினைக்கும் போதே, அவன் அன்பு மகள் மல்லிகா அப்பா என ஓடி வந்தாள். என்னம்மா? சொல்லு என்று தன் அருகில் அழைத்தான். அப்பா, எங்க பள்ளியில போன வாரம் நடந்த தேர்வில நான்தான் முதலா வந்திருக்கேன். அதைப் பாராட்டி, இன்னிக்கு காலையில 10 மணிக்கு விருது குடுக்க போறாங்க. நீங்களும் அம்மாவும் அவசியம் வரணும்பா என்றாள். அப்பதான் எனக்கு பெருமையா இருக்கும் என்று கூறி விட்டு இவன் பதிலைக் கூட எதிர்பாராமல், 10 மணிக்கு பார்க்கலாம்பா என்றவாறே பறந்து சென்றாள்.

அதே 10 மணிக்குதான் டெல்லியில் புது ரோபோவின் செய்முறையை குடுக்க வேண்டும். இன்னிக்கு யார் முகத்திலடா முழித்தோம்? ரோஜர் .... என்னடா இப்படி சிக்கல்ல மாட்டி விட்டுட்டியே? என முணகிக் கொண்டே தன் காலை விருப்ப பானமான ஸ்காட்ச்சை எடுத்து கிளாசில் ஊற்றிக் கொண்டே மணி பார்த்தான். அதற்குள் 8.00 ஆயிடுச்சா? ஒரே முடக்கில் கிளாசில் இருந்ததை வாயில் ஊற்றிக் கொண்டு, தன் செல்லில் இருந்த இன்னொரு பட்டனை அமுக்க, தன் மாஸ்டர் கம்யூட்டரின் புரோகிராம் விண்டோ தெரிய வந்தது. எதோதோ பட்டன்களை அமுக்கி நெல் அறுவடை ரோபோக்களை இன்று காலை 9.00 மணியிலிருந்து வேலை துவங்குகிற மாதிரி புரோகிராமை மாற்றி அமைத்தான். மல்லிகாவின் பள்ளிக்கு கட்டாயம் போகணும், இல்லையென்றால் பாவம் பிள்ளை ஏமாந்து விடுவாள். பள்ளிக்கு போனால், எப்படி டெல்லியில் 10 மணிக்கு செய்முறை விளக்கம் கொடுப்பது. பலமாக யோசித்தான். சரி, அதுதான் நல்ல ஐடியா. விடுவிடுவென எழுந்து மொட்டை மாடிக்கு சென்று தன் கிளைடரை கிளப்பினான். அடுத்த 3வது நிமிடத்தில் தனது பரிசோதனை வயலில் இருந்தான். அங்குள்ள காமிராக்களை ஆன் செய்து அந்த புது ரோபோவை இயக்கி தக்காளி பறிப்பதை விளக்கம் சொல்லிக் கொண்டே வயலில் இயக்க ஆரம்பித்தான். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம், அனைத்து செயல் முறைகளையும் விளக்கி காமிராவில் பதிவு செய்து தனது செல்போனில் காபி செய்து கொண்டு உடனே கிளைடரை கிளப்பி வீட்டுக்கு வந்து சேர மணி ஏற்கனவே 9:15. வீட்டின் முற்றத்தில் உள்ள மானிட்டரில் ரோபோக்கள் நெல் அறுவடை செய்து கொண்டிருப்பது ஒடிக் கொண்டிருந்தது. அதை பார்த்து கொண்டே குளித்து பள்ளிக்கு கிளம்ப தயாரானான். ஐந்தே நிமிடத்தில் கிளம்பி தயாராகி வந்து தன் மனைவி செண்பகத்திற்காக காத்திருந்தான்.

எவ்வளவுதான் விஞ்ஞானம் வளர்ந்து வேகமானாலும் இவ மட்டும் சீக்கிரம் கிளம்ப மாட்டாளே என மனதில் நினைத்துக் கொண்டிருந்த போதே, நான் கிளம்பிட்டங்க என செண்பகம் வந்தாள். இருவரும், மீண்டும் கிளைடர் பயணம், 5 வது நிமிடத்தில் பள்ளியில் இருந்தனர். 10 மணி, விழா ஆரம்பமாயிற்று. அதே சமயத்தில், இவன் செல் போனின் ஒரு பட்டனை அமுக்க, இவன் ஏற்கனவே பதிவு செய்த ரோபோ விளக்கமுறையும் டெல்லி அரங்கத்தில் ஒளிபரப்ப ஆரம்பித்தது. தலைமை ஆசிரியர் பேச ஆரம்பித்தார். "எல்லோருக்கும் வணக்கம் .... அதே சமயத்தில், சாமியப்பனின் குரல் டெல்லி அரங்கத்தில் ஒலிக்க ஆரம்பித்தது. "எல்லோருக்கும் வணக்கம், பொதுவா செய்முறைன்னா நேரிலதான் இருக்கும், ஆனா நான் முதல்ல வயல்ல இதை எப்படி பயன்படுத்தறதுன்னு காண்பிச்சுட்டு பிறகு உங்க முன்னால வந்து நிற்க போறேன்" எனக் கூறி செய்முறை படம் ஓட ஆரம்பித்தது. தலைமை ஆசிரியர் மல்லிகாவுக்கு விருது வழங்கும் போது மாணவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தது இவனுக்கு பெருமையாக இருந்தது. பள்ளி விழா ஒருவழியாக 10:30க்கு முடிய, தன்னுடைய ஜெட்டில் தாவி அடுத்த 20வது நிமிடம் டெல்லி அரங்கத்தில் நுழைய அனைவரும் இவனை கை தட்டி வரவேற்றனர். மீதமுள்ள செய்முறையும் முடித்து விட்டு, விருந்தில் கலந்து கொண்டு வீடு வந்து சேர்ந்த போது இரவு மணி 9.00. கருமேகம் வானில் எங்கும் படர்ந்து மின்னலுடம் மிரட்டிக் கொண்டிருந்தது. முற்றத்திலிருந்த மானிட்டர், நெற்கதிர் அறுவடை முடிந்தது என பிளாஷ் செய்து கொண்டிருந்தது. அப்பாடா என படுக்கைக்கு சென்றவன் ரோஜரை தடவிக் குடுத்து விட்டு தனது விருப்ப பானமான ஸ்காட்ச்சை எடுத்து கிளாசில் ஊற்றிக் கொண்டே செல் போனிலுள்ள சினிமா என்ற பட்டனை அமுக்க லேசர் திரையில் சிவாஜி ரஜினி "அதிருதுல்ல" என்று சொல்லிக் கொண்டிருந்தார். படம் வந்து எத்தனை வருசமாச்சு, ஆனா தலைவர் தலைவர்தான் என்று உளறிக் கொண்டே படுக்கையில் மல்லாக்க சாய்ந்தான்.


செண்பகம் கத்திக் கொண்டிருந்தாள். யோவ் என்னய்யா ரோஜா ரோஜான்னு பெனாத்திக்கிட்டு இருக்க. மணி 8-ஆவுது, இன்னும் என்னய்யா தூக்கம்? நாய் காலை நக்கறதைக் கூட தெரியாம மனுசனுக்கு என்ன தூக்கமோ தெரில. எந்திரிய்யா? நாளைக்கு மழை வருதாம், பண்ணையக்காரர் வூட்டுல இன்னிக்கே நெல் அறுவடை வச்சிருக்காங்க. சீக்கிரம் வர சொல்லி ஆள் வந்திருச்சு. அப்புறம் உம் புள்ள மல்லிகாவுக்கு ஒண்ணும் படிப்பு ஏறலயாம். உங்கிட்ட வாத்தியார் பேசணுமாம். அப்படியே பள்ளிக்கூடத்தில போயி என்னானு ஒரு வார்த்தை கேட்டுட்டு வந்துரு. கந்தன் காலையில உன் பங்கு கள்ளை வேற இறக்கி வச்சிட்டு போயிருக்கான், மூஞ்சிய கழுவிட்டு வந்து குடிச்சுட்டு வேலைக்கு போய்யா. இன்னிக்காவது இந்த கருமாந்தரம் இரண்டாவது ஆட்டம் இங்கிலீசு படம் அது இதுன்னா பார்க்காமா நேரமா வந்து சேரு. நீ எங்க திருந்த போறீயோ என்று ஒரே மூச்சில் கூறிவிட்டு சாணியைத் தட்ட ஆரம்பித்தாள்.

Saturday, December 1, 2007

தமிழில் டைப் செய்வது எப்படி?

ப்படி? எப்படி? தமிழில் டைப் செய்வது எப்படி? இந்த கேள்வி எனக்கு முதன் முதலாக வந்த போது நண்பர் ஜான் பெனடிக்ட் உதவி செய்தார். இதே கேள்வி பலருக்கு இன்னும் இருக்கு, இதோ பதில்கள். இரண்டு விதமா நாம தமிழில் எழுதலாம்.

இந்த பதிவை செய்த பின் நணபர் ராஜகோபால் ஒரு அருமையான வழியை கூறியுள்ளார், இதோ அதையும் சேர்த்து ....

மிக மிக எளிய முறை - Google way - கிழே கண்ட URL-க்கு செல்லுங்கள்

1.http://www.google.com/transliterate/indic/Tamil

2. ஆங்கிலத்தில் டைப் செய்து space press செய்ய தமிழில் வார்த்தை தோன்றும் ...

3. ட்ரை அண்ட் என்ஜாய். இதை பயன்படுத்தும் போது இன்னும் பல பயன்பாடுகளை அறிவீர்... எடுத்துக்காட்டாக, தமிழ் வார்த்தை தோன்றிய பிறகு backspace press செய்ய எல்லா word combination-ம் தெரியும்.

4. அப்புறம் என்னா, cut and paste தான்.


முதலாம் முறை / எளியது: கீழ்கண்ட ஏதாவது ஒரு இணையப் பக்கத்திற்கு சென்று, ஒரு பக்கம் (Text Box-ல்) ஆங்கிலத்தில் டைப் செய்ய, மறு பக்கம் (இன்னொரு Text Box-ல்) தமிழில் வார்த்தைகள் தெரிய வரும். ammaa - என ஆங்கிலத்தில் டைப் செய்தால் அம்மா என தமிழில் காணலாம். பிறகு, அந்த தமிழ் செய்தியை அப்படியே Text Box-லிருந்து (Shift+a - Select all, Ctrl+c - Copy) Clipbiard-ல் Copy செய்து Blog site-க்கு சென்று Paste செய்யலாம், Comments பதிவு செய்யலாம்.

1. http://www.islamkalvi.com/web/Romanised2Unicode.htm
2. http://www.tamil.net/ (Scroll down to end of the page to see the Tamil keyboard)

இரண்டாம் முறை: ஏதாவது ஒரு EDITOR, நான் Murasu Editor (http://www.murasu.com/) பயன்படுத்துகிறேன். நீங்க எழுத வேண்டியதை இந்த Editor-ல எழுதி விட்டு, அதை ஒரு File-ஆ Store () (.mrt extension) பண்ணி வைத்துக் கொள்ளலாம். இப்ப நீங்க இந்த தமிழ் Content-ஐ அப்படியே Copy செய்து, அதை Unicode-ஆக மாற்றம் செய்த பிறகுதான் இணையத்தில் பதிவு செய்ய முடியும்.

1. Murasu Editor-ல் தங்கள் செய்தியை டைப் செய்து கொள்ளவும்
2. டைப் செய்த செய்தியை Copy (Shift+a - Select all, Ctrl+c - Copy) Clipbiard-ல் Copy செய்து கொள்ளவும்.
3. http://www.suratha.com/reader.htm என்ற இணையதளத்திற்கு செல்லவும் (scroll down to find 2 text boxes)
4. அங்குள்ள Top Text Box-ல், நீங்கள் ஏற்கனவே Clipboard-ல் Copy செய்து வைத்துள்ள செய்தியை இங்கு Paste செய்யவும்.
5. அடுத்து, TSC என்ற Radio button-ஐ check செய்யவும்
6. ட..டா.... இப்போது தங்கள் செய்தி கீழே உள்ள Text Box-ல் தெரிய வரும்.
6. இப்போது, இந்த, கீழே உள்ள Text Box-லிருந்து (Shift+a - Select all, Ctrl+c - Copy) Clipbiard-ல் Copy செய்து Blog site-க்கு சென்று Paste செய்யலாம், Comments பதிவு செய்யலாம்.