வருடம் 2007-ல் தொழில்நுட்பங்களில் பல முன்னேற்றம் கண்டுள்ள நாம், அரசியல் மாநாடு என்ற பெயரில், பத்து லட்சம் பேரை திரட்டி நடத்தப்பட வேண்டிய அவசியம் என்ன? மாநாடு காண வந்த அனைவரும் சொந்த வேலையை விட்டு வந்திருப்பார்கள். எவ்வளவு பொருளாதார நஷ்டம்? எத்தனை உற்பத்தி பாதிப்பு? அரசும், ஆளும் கட்சியும் இதை கொஞ்சமாவது யோசித்ததா? தங்களது சொந்த பலத்தைக் காண்பிக்க பொதுஜனத்தை சூரையாடும் இந்த கட்சி மாநாடுகளின் சூசகம் எத்தனை இளைஞர்களுக்கு புரியப் போகுது? சினிமாவில் ஹீரோ வந்தாலும், கட்சிக் கூட்டத்தில் தன் தலைவரை பார்த்தாலும் ஆனந்தக் கண்ணீர் விடும் எத்தனை அப்பாவி இளைஞர்கள். தன்னை அறியாமல் வாய் விட்டு தொண்டை கட்ட தலைவர் மேடை ஏறும் வரை கத்தும் கடைநிலை தொண்டன் எத்தனைப் பேர்? இவர்களுக்கு மாநாடு என்ற பெயரில் கழகங்கள் காட்டும் கண்(கட்டு)காட்சிதான் இந்த மாநாடு. இதை எல்லாம் கற்பனையாக நான் எழுதுவதாக நினக்க வேண்டாம். கரை வேட்டி மட்டும்தான் நான் கட்டியதில்லை. கலைஞர் சேலத்திற்கோ, ராசிபுரத்துக்கோ வந்த போது (எங்கள் ஊரில் இரவு பஸ் இல்லாததால், வாடகை கார் எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் சென்று) மணிக்கணக்கில் காத்திருந்து தலைவரை பார்த்து கோசம் போட்டு ஆனந்தக் கண்ணீர் விட்ட கழக கண்மணிதான் நானும். அது மட்டுமல்ல, தேர்தல் சமயங்களில் சூரியன் சின்னம் வரைந்த அனுபவும், பூத்துகளில் நின்று கொண்டு வாக்கு சேகரித்த அனுபவமும் நிறைய உண்டு. அனைத்தும் மாயை, ஏமாற்று வேலை என்று நன்கு புரிந்துதான் இதை எழுதுகிறேன்.
இந்த நிலை மாற வேண்டும், நான் சிறுவயதில் செய்த தவறுகளையே திரும்ப (இப்போது) செய்து கொண்டிருக்கும் இளைஞர்களை மாற்ற வேண்டும், சிந்திக்க செய்ய வேண்டும். இளைஞர்களும், மாணவர்களும் தேர்ந்த களிமண் போன்றவர்கள், அதை செம்மையாக, பதமாக வடிவெடுத்தால்தான் நல்ல பாத்திரம் கிடைக்கும்.
ஸ்டாலின் அவர்கள் இதைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்குமா இல்லையா என எனக்கு தெரியாது. அனைத்து தகுதியும் வாய்ந்த தாங்கள் முதல்வராக ஆக எந்த கேள்வியும், சந்தேகமும் இல்லை. அதே சமயத்தில்,
கழகங்களின் கண்ணாமூச்சிகளில் இருந்து இந்த இளைஞர்களை விடுத்து வேறு வழி நடத்த செல்ல முடியுமா?
..........இன்னும் பல கேள்விகள் இங்கு எழுப்பலாம். ஆனால், நான் கூற வந்ததின் அர்த்தத்தை சுருங்க சொல்லிவிட்டேன்.
மாநாட்டில், தங்கள் தலைவரும் தந்தையும் என்ன கூறினார்? தந்தை பெருமைபடும் வகையில் மகனாக, நல்ல தலைவனாக தாங்கள் இருப்பீர்கள் என நம்பிக்கை படக் கூறினார். அவர் எதை வைத்து கூறினார் என தெரியாது, ஆனால், இன்றைய இளைஞர்களை தங்களால் திருத்த முடியும், ஆரோக்கிய அரசியலை குடுக்க முடியும், ஒரு புதுமை "புரட்சியை" உருவாக்கி தங்கள் பெயருக்கேற்ப சரித்திரத்தில் இடம் பிடிக்க முடியும், அதைத்தான் நான் (எனைப் போன்ற) மற்றவரும் விரும்புவர்.
பதில் உங்கள் கையிலல்ல, "செயலில்" ........