Saturday, October 27, 2007

கேவல அரசியல்



முன்னாள் முதல்வர் வீட்டிலேயே அத்து மீறி ஆள் நுழைந்திருக்கிறான். ஆளைப் பிடித்து விசாரணையும் நடக்குது. பாதுகாப்பு விசயத்தில் இருக்கும் இந்த குறை வருத்தப்பட வேண்டிய விசயமே. ஆனாப் பாருங்க, கரும்பு தின்ன கூலியாங்கற கதையா இந்த அரசியல்வாதிங்க இத வச்சி எவ்வளவு அட்டகாசம் பண்றாங்க. இந்த கழகம், அந்த கழகம்ன்னு இல்ல எந்த கட்சியா இருந்தாலும் இதயேதான் செய்வாங்க. ஏன்னா, இது நம்ம ஆளுங்களோட தனி அரசியல் ஸ்டைலு.
குளிர்கால சட்டசபை தொடர் தொடங்கியாச்சு, சட்டசபைக்கு போயி எங்க ஊரு எம்.எல்.ஏ ஏதாச்சும் தொகுதிக்கு சாதிப்பாருன்னு எதிர்பார்த்து கிடக்கிற குப்பன் சுப்பனுக்கெல்லாம் வச்சாங்கய்யா ஆப்பு. தொடர் தொடங்கின உடனே பாதுகாப்பு பிரச்சினையை ஆரம்பிச்சாங்க. ஒத்துக்கிறோம், கண்டனத்துக்குறிய விசயம்தான். குரல் குடுக்கிறாங்க. அரசும் ஆளைப் பிடிச்சு விசாரிச்சுக்கிட்டிருக்கு. சரி அடுத்த வேலைய பார்ப்பாங்கன்னு பார்த்தா, சட்டசபைல விளையாடறாங்கய்யா. கடைசில முடிவு வெளிநடப்பு, சஸ்பெண்ட் இதுதான் மிச்சம்.
ஒரு நிமிஷம் இந்த ஆளுங்க எல்லாம் சிந்திக்கணும். ஒவ்வொரு எம்.எல்.ஏவும் அரசாங்க ஊழியன். அரசு சம்பளம், குடியிருப்பு, அப்புறம் சலுகைகள் வேற எக்ஸ்ட்ரா. மக்கள் வரிப் பணத்திலிருந்து கிடைக்கிற வருமானத்திலுருந்து வர பணத்தை சம்பளமா கை நீட்டி வாங்கற ஊழியன் தன் கடைமைய சரி வர செய்யாம, காலத்துக்கும் தலைவன் தலைவி புகழ் பாடி காலம் கழிப்பது சரியல்ல. முதல்வரோ இல்ல மந்திரியோ போகும் போது சாலை ஓரம் போக்குவரத்த தடுத்து நிறுத்தறாங்க. மாணவர்கள், வயதானவங்க, முடியாதவங்க, ஏழை, பணக்காரன்னு பொதுமக்கள் எல்லாரும் வழி விட்டு காத்து கிடக்கிறாங்க. எதுக்குய்யா? நம்மலால தேர்ந்து எடுக்கப்பட்டவர், நமக்காக வேலை செய்ய போயிட்டிருக்கார்ன்னு நாம் குடுக்கற முன்னுரிமைதான் அது. அதை சரியா புரிஞ்சிக்காம பொதுமக்களின் மனங்களை சூறையாடி, சுரண்டி அதில குளிர் காயும் இந்த கேவலமான அரசியல் நிலைமை மாறணும்.
மாறும் என்ற நம்பிக்கையில் ...

Tuesday, October 23, 2007

ஆயிரத்தில் ஒருவன்


ன்று ஆயுதபூஜை. மாலை நேரம் அந்த ஏரியாவே கலகலப்பாக இருந்தது. அண்ணா, அண்ணா இன்னும் கொஞ்சம் பொரி போடுங்கண்ணா. டேய், நீ முதல்லய வாங்கிட்ட அந்த பக்கம் போடா. எலே, பெரிய பட்டறைல பொரியோட சேர்த்து பொங்க சோறும் குடுக்கறாங்கலாம் என்று இன்னொரு குரல். அந்த கூட்டத்தோடு சேர்ந்து ரகுவும் வேகவேகமாக நடையைக் கட்டினான். இன்னும் ரெண்டு பட்டறையை பார்த்தா பை நிரம்பிரும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டே கூட்டத்தில் முண்டியடித்து பையைக் காட்டி பொரி வாங்கினான்.


ஒரு வழியாக பை நிரம்பியடவுடன் தன் சகாக்களுடன் ஒரு திண்ணையில் அமர்ந்தான். எல்லோரும் அவர்களுடைய பையை திறந்து கொறிக்க ஆரம்பித்தனர். அனைவரின் முகத்திலும் சந்தோசம். டேய், இன்னிக்கி ராத்திரி நம்ம பெரிய பட்டறையில வீடியோவுல தலைவர் படம் போடுறாங்களாம், எல்லாம் போலாம்டா என்றான் சேகர். ஆளப் பார்ரா, இன்னும் ஒரு ரவுண்ட் போயி பொரி வாங்கலாம்டா என்றான் இன்னொருவன். எதுவும் பேசாமல் இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டு சாப்பிடுவது போல பாசாங்கு செய்து கொண்டிருந்தான் ரகு. என்னடா ரகு, ஒரே யோசனையா இருக்க? நீ சாப்பிடலயா என்றான் சேகர். இல்லடா, வீட்டுக்கு போலாம்னு பார்க்கிறேன் என்றான் ரகு பதிலுக்கு. வீட்டுக்கு போயி என்னடா பண்ணப் போற, நாங்களாவுது பள்ளிக்கூடம் போகணும், அனாதை ஆசிரமத்துல எடுபிடி வேலை பார்க்குற உனக்கு என்னடா அவசரம் என்றான் சேகர் கிண்டலாக. டேய் ரகு இப்ப சாப்பிடலனா பொரி, சுண்டல் எல்லாம் நாளைக்கு நமுத்து புளுத்து போயிருமடா என்றான் இன்னொருவன். மற்ற நண்பர்களும் இதை கேட்டு ரகுவை பார்த்து நக்கலாக சிரித்தனர். ரகு எதையும் காதில் வாங்காமல், மேனேஜர் தேடுவார், நான் போறேன் என்று யார் பதிலுக்கும் காத்திராமல் விருட்டென அந்த இடத்தை காலி செய்து ஒருவழியாக ஆசிரமத்தை வந்து சேர்ந்தான்.


எதிர்பார்த்த மாதிரியே மேனேஜர் ஆறுமுகம் எதிரில் வந்தார். எங்கடா போயிருந்தே என்று அதட்டலாக கேட்டார். இங்கதான் சார் இருந்தேன், நம்ம பக்கத்து நூல் மில்லுல இருந்து ஒரு பை நிறைய பொரியும் சுண்டலும் ஒரு ஆள் மூலமா குடுத்தாங்க, இந்தாங்க சார் என்று கையிலிருந்த பையை காண்பித்தான். அதான பார்த்தேன், பூஜையும் அதுவுமா எங்க உன் கூட்டாளிகளோட சேர்ந்து பொரி வாங்கி தின்ன போயிட்டியான்னு பார்த்தேன். சரி, இதை எல்லாம் சரியா பிரிச்சு இங்க உள்ள எல்லா பயலுகளுக்கும் குடு. அப்படியே பார்த்துக்கோ, நான் இந்த பெரிய பட்டறை வரைக்கும் போயிட்டு வர கொஞ்சம் லேட்டாவும் சரியா என்று கூறி விட்டு தன் சைக்கிளை மிதித்தார். ரகு ஆபிஸ் ரூமிலுள்ள சரஸ்வதி படத்துக்கு முன் தான் கொண்டு வந்த பொரியை படைத்து எல்லா மாணவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து தானும் ஒரு வாயை அள்ளி போட்டான். எதையோ சாதித்து விட்ட திருப்தியுடன் சாமி படத்தை பார்க்கும் போது சரஸ்வதி இவனை பார்த்து கருணையுடன் சிரிப்பதாக உணர்ந்தான்.

Tuesday, October 2, 2007

நேசிக்கிறேன் ...


ன் 3-வயது மகளுடைய பள்ளியில் "Family Value"
பார்ட்டியின் போது "I Love You Forever" என்ற தலைப்பிட்ட
சிறுவர் கதை படித்துக் காட்டினார்கள்.
அந்த கதை, இங்கே கவிதை உருவில்,

னக்கு பசிக்கையிலே
பாலூட்டி சோறூட்டினேன்!
உன் பொக்கை வாய் சிரிப்பிலே
என் பசி மறந்து போனேன்!
நீ தூங்க நான் தாலாட்டினேன்!
உனை நான் நேசிக்கிறேன்
என் மூச்சுள்ளவரை நீ எனக்கு குழந்தைதானே!

சிங்காரமாய் வளர்ந்தாய்
குறும்புகள் பலவும் செய்தாய்!
நானே சாப்பிடுகிறேன் என்று
வீடெல்லாம் இறைத்து
என்னை கோபமுற செய்தாய்!
அதை மறந்து தினமும்
நீ தூங்க நான் கதை படித்தேன்!
உனை நான் நேசிக்கிறேன்
என் மூச்சுள்ளவரை நீ எனக்கு குழந்தைதானே!

ளாகி வாலிபனாக
எங்கெங்கோ சென்றாய்!
புது சகவாசம் கொண்டாய்
தாமதமாக வீடு திரும்பி
என்னை வருத்தப்படவும் செய்தாய்!
அதை மறந்து தினமும்
நீ தூங்கியவுடன் மனதில் சொன்னேன்!
உனை நான் நேசிக்கிறேன்
என் மூச்சுள்ளவரை நீ எனக்கு குழந்தைதானே!

ல்யாணமாச்சு, பக்கத்து தெருவில்
தனி வீடும் போனாய்!
உனைப் பார்க்க ஆசை
நானும் வந்தேன்!
நீ தூங்கிப் போயிருந்தாய்
அதைக் கண்டு திரும்பி வந்தேன்!
வழியில் எனக்குள் சொல்லிக் கொண்டேன்
உனை நான் நேசிக்கிறேன்
என் மூச்சுள்ளவரை நீ எனக்கு குழந்தைதானே!

னக்கு வயசாச்சு
படுத்த படுக்கையானேன்!
உனைப் பார்க்க ஆசை
ஆசையில் உனை அழைத்தேன்!
நீ வரும் நேரம்
நான் தூங்கிப் போனேன்!
அதைக் கண்டு நீயும் தாலாட்டினாய்
உனை நான் நேசிக்கிறேன்
என் மூச்சுள்ளவரை நீ எனக்கு அம்மாவே!