Thursday, July 12, 2007

தவிப்பு

கார்த்திக் காலையிலிருந்தே இருப்பு கொள்ளாமல் தவித்தான். வனிதா இன்று எப்படியும் ஒரு நல்ல முடிவு சொல்லி விடுவாள் என்று நம்பிக்கையுடன் இருந்தான். வனிதா நல்ல அழகான, புத்திசாலி பெண். 3 மாதங்களுக்கு முன்புதான் மாற்றலாகி இவன் வேலை செய்யும் அலுவலகத்திலேயே காரியதரிசியாக சேர்ந்திருந்தாள். வழக்கமாக எப்படியும் காலை 8:30 மணி அளவில் அலுவலகத்தில் இருப்பாள். கார்த்திக் ஒருமுறை மணி பார்த்தான், 9.30 ஆகியிருந்தது, இந்த நேரம் வந்திருப்பளே? நேற்று போகும் போது கூட நான் சொன்னதை தெளிவாக புரிந்து கொண்டதாகவும், நாளை காலை நல்ல முடிவு சொல்கிறேன் என்றும் சொன்னாளே. ஏன் இன்னும் கூப்பிடவில்லை? சரி, காலையில், அது இது என வேலை நிமித்தமாக பிசியாக இருப்பாள், கொஞ்சம் காத்திருக்கலாமே என தனக்குத்தானே சமாதானம் சொன்னான்.


டிரிங்.... டிரிங்.... தொலைபேசி சிணுங்கியது, ஆவலுடன் எடுத்தான். மறுமுனையில் பரசுராமன், அவனது மேனேஜர். அவன் போன வாரம் முடித்து கொடுத்த கம்பெனி பாலன்ஸ் சீட்டை மீண்டும் ஒருமுறை சரிபார்க்க சொல்லி உத்தரவிட்டார். கார்த்திக் மனசுக்குள்ளேயே அலுத்து கொண்டான், இது எப்படியும் ஓரு மணி நேரமாவது ஆகும். சலித்துக் கொண்டே கம்ப்யூட்டரில் கணக்கை சரி பார்க்க தொடங்கினான். ஒரு வழியாக அந்த வேலையை முடித்து விட்டு, மீண்டும் ஒருமுறை மணி பார்த்தான். 11:30, ஏன் வனிதாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை? நேற்று நடந்த சந்திப்பில் கூட நன்றாகதானே பேசினாள். அவள் விருப்பத்தை கூட மறைமுகமாக காண்பித்தாளே, ஒருவேளை, இன்று அலுவலகத்திற்கே வரவில்லையா? நேற்று தும்மி கொண்டிருந்தாளே, உடம்புக்கு எதேனும் சரியில்லையா? மனதிற்குள் பல கேள்விகள் முளைத்தன. பேசாமல் போன் செய்து கேட்டு விடலாமா? வேண்டாம், அவசரப்படுகிறேன் என்று தப்பாக நினைத்து விடுவாள். எதற்கும் அவள் இருக்கை பக்கம் சென்று அவளுக்கு தெரியாமல் வந்து விட்டாளா என பார்த்து விடலாம் என்று அவள் இருக்கை நோக்கி நடக்க தொடங்கினான். அப்போது அவள் மேனேஜர் அறைக்குள் நுழைவதை பார்த்தான். அப்பாடா, அவள் வந்திருக்கிறாள் என ஒருவித மகிழ்ச்சியுடன் தன் இருக்கைக்கு திரும்பி நடந்து சென்றான். அவளாக அழைக்கட்டும் என மீண்டும் காத்திருந்தான்.



டிரிங்... டிரிங்... தொலைபேசி சிணுங்கியது, வனிதாவா என ஆவலுடன் எடுத்தான். மீண்டும் மறுமுனையில் பரசுராமன். இந்த முறை, அவனை ஒரு மீட்டிங் என சொல்லி அழைத்தார். தட்ட முடியாமல், பொருமிக் கொண்டே அவர் அறைக்கு சென்றான். அங்கு பலர் கூடி இருந்தனர். கார்த்திக்கை மேனேஜர் எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அது ஒரு புதிய புராஜெக்ட் சம்பந்தபட்ட கூட்டம் என அப்போதுதான் புரிந்தது. மீட்டிங் தொடர்ந்து 3 மணி நேரமாக நடந்தது. முடிந்தவுடன், அவசர அவசரமாக இருக்கைக்கு வந்து, சரி, பொறுத்தது போதும் அவளிடம் நேரிடையாகவே கேட்டு விடலாம் என்று அவளின் இருக்கை நோக்கி நடந்தான். இருக்கையில் அவள் இல்லை, வீட்டுக்கு போய் விட்டாள் போலும், இனி நாளைக்குதான், மிகுந்த ஏமாற்ற்த்துடன் திரும்பினான்.

அன்று மாலை, ஒரு பீர் பாட்டிலை திறந்து கொண்டே இன்ஸ்யூரன்ஸ் கம்பெனியில் வேலை செய்யும் தன் ரூம் மேட் குமாரிடம் நடந்ததை கூறி புலம்பி தள்ளினான். அதற்கு குமாரும், "கவல படாதே மாப்ளே! இருக்கவெ இருக்கு, ஒன்னோட கடசி அஸ்திரம், நாளைக்கு அத்த சொல்லி உண்டா இல்லியானு கேளு, அவ கண்டிப்பா ஒத்துகிடுவா" என அவன் சிங்கார சென்னை தமிழில் கூறியதை கார்த்திக்கும் கவனமாக காதில் வாங்கிக் கொண்டான்.

மறுநாள் காலை, அலுவலகம் போனவுடன், முதல் வேலையாக, அவள் இருக்கைக்கு சென்றான். அவளிடன் "என்னங்க, பிடிச்சிருக்கா, நேற்று முழுதும் உங்க பதிலுக்காக காத்திருந்தேன்" என கேட்டான்,. அவளும் சிறிது மெளனம் காத்து, "அதை பற்றி யோசித்தேன் ஆனால்!" என இழுத்தாள். கார்த்திக்கால் மேலும் பொறுக்க முடியவில்லை, தனது கடைசி (அஸ்திரம்) முடிவையும் சொன்னான். கார்த்திக்கின் ஸ்திரமான முடிவை கேட்டு வனிதாவின் முகம் பிரகாசமானது, "சரி" என சம்மதித்து தனது முடிவை சொன்னாள்.


உடனே, கார்த்திக் தன் இருக்கைக்கு ஒடி, குமாரை போனில் அழைத்தான். டேய், ரொம்ப தாங்ஸ்டா!, நீ சொன்ன மாதிரியே முதல் மாச இன்சூரன்சு பிரிமியத்த இலவசமா நானே கட்டிடறேன்னு சொன்னேன், உடனே பாலிசிக்கு ஒத்துகிட்டா, அவங்க குடும்பத்தாருக்கும் இதே மாதிரி போட்டுரலாம்னு சொல்லிட்டா என்றான் இரட்டை சந்தோசத்துடன். பதிலுக்கு குமாரும் "அப்ப இன்னிக்கு நைட் பார்ட்டிதான், என்று வழிந்தான். கார்த்திக் தனது லிஸ்டில் அடுத்து யார் என பார்த்தான், அக்கவுண்ட்ஸ் பிரிவில் புதிதாய் சேர்ந்த சித்ரா, தனக்குள் சிரித்துக் கொண்டே அவளை சந்திக்க தயாராக கிளம்பும் போது, டிரிங்... டிரிங்... தொலைபேசி சிணுங்கியது, மீண்டும் மறுமுனையில் மேனேஜர் பரசுராமன் ....