அன்று ஆயுதபூஜை. மாலை நேரம் அந்த ஏரியாவே கலகலப்பாக இருந்தது. அண்ணா, அண்ணா இன்னும் கொஞ்சம் பொரி போடுங்கண்ணா. டேய், நீ முதல்லய வாங்கிட்ட அந்த பக்கம் போடா. எலே, பெரிய பட்டறைல பொரியோட சேர்த்து பொங்க சோறும் குடுக்கறாங்கலாம் என்று இன்னொரு குரல். அந்த கூட்டத்தோடு சேர்ந்து ரகுவும் வேகவேகமாக நடையைக் கட்டினான். இன்னும் ரெண்டு பட்டறையை பார்த்தா பை நிரம்பிரும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டே கூட்டத்தில் முண்டியடித்து பையைக் காட்டி பொரி வாங்கினான்.
ஒரு வழியாக பை நிரம்பியடவுடன் தன் சகாக்களுடன் ஒரு திண்ணையில் அமர்ந்தான். எல்லோரும் அவர்களுடைய பையை திறந்து கொறிக்க ஆரம்பித்தனர். அனைவரின் முகத்திலும் சந்தோசம். டேய், இன்னிக்கி ராத்திரி நம்ம பெரிய பட்டறையில வீடியோவுல தலைவர் படம் போடுறாங்களாம், எல்லாம் போலாம்டா என்றான் சேகர். ஆளப் பார்ரா, இன்னும் ஒரு ரவுண்ட் போயி பொரி வாங்கலாம்டா என்றான் இன்னொருவன். எதுவும் பேசாமல் இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டு சாப்பிடுவது போல பாசாங்கு செய்து கொண்டிருந்தான் ரகு. என்னடா ரகு, ஒரே யோசனையா இருக்க? நீ சாப்பிடலயா என்றான் சேகர். இல்லடா, வீட்டுக்கு போலாம்னு பார்க்கிறேன் என்றான் ரகு பதிலுக்கு. வீட்டுக்கு போயி என்னடா பண்ணப் போற, நாங்களாவுது பள்ளிக்கூடம் போகணும், அனாதை ஆசிரமத்துல எடுபிடி வேலை பார்க்குற உனக்கு என்னடா அவசரம் என்றான் சேகர் கிண்டலாக. டேய் ரகு இப்ப சாப்பிடலனா பொரி, சுண்டல் எல்லாம் நாளைக்கு நமுத்து புளுத்து போயிருமடா என்றான் இன்னொருவன். மற்ற நண்பர்களும் இதை கேட்டு ரகுவை பார்த்து நக்கலாக சிரித்தனர். ரகு எதையும் காதில் வாங்காமல், மேனேஜர் தேடுவார், நான் போறேன் என்று யார் பதிலுக்கும் காத்திராமல் விருட்டென அந்த இடத்தை காலி செய்து ஒருவழியாக ஆசிரமத்தை வந்து சேர்ந்தான்.
எதிர்பார்த்த மாதிரியே மேனேஜர் ஆறுமுகம் எதிரில் வந்தார். எங்கடா போயிருந்தே என்று அதட்டலாக கேட்டார். இங்கதான் சார் இருந்தேன், நம்ம பக்கத்து நூல் மில்லுல இருந்து ஒரு பை நிறைய பொரியும் சுண்டலும் ஒரு ஆள் மூலமா குடுத்தாங்க, இந்தாங்க சார் என்று கையிலிருந்த பையை காண்பித்தான். அதான பார்த்தேன், பூஜையும் அதுவுமா எங்க உன் கூட்டாளிகளோட சேர்ந்து பொரி வாங்கி தின்ன போயிட்டியான்னு பார்த்தேன். சரி, இதை எல்லாம் சரியா பிரிச்சு இங்க உள்ள எல்லா பயலுகளுக்கும் குடு. அப்படியே பார்த்துக்கோ, நான் இந்த பெரிய பட்டறை வரைக்கும் போயிட்டு வர கொஞ்சம் லேட்டாவும் சரியா என்று கூறி விட்டு தன் சைக்கிளை மிதித்தார். ரகு ஆபிஸ் ரூமிலுள்ள சரஸ்வதி படத்துக்கு முன் தான் கொண்டு வந்த பொரியை படைத்து எல்லா மாணவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து தானும் ஒரு வாயை அள்ளி போட்டான். எதையோ சாதித்து விட்ட திருப்தியுடன் சாமி படத்தை பார்க்கும் போது சரஸ்வதி இவனை பார்த்து கருணையுடன் சிரிப்பதாக உணர்ந்தான்.
6 comments:
Raghu kodutha pori suvaiyaga irrukkirathu.
Late - aaa vanthaalum Latestaa (Ayutha Poojaiyoda)vanthirukeenga kathaiyoda...Simply touching Ravi garu...Antha Kalaivani arul ungalukku endrum nilaithirukatoom...thangal kathai rasigan, Endrum Anbudan - Karan
A touching story - very apt for the season. You have a very good sense of picking the right moment for a right story and support them with nice pictures.
Continue your good work.
Ragu is 1000il oruvan like Ravi I guess. Very nice story.
மீண்டுமொரு நறுக்கான, கருத்தான கதை. பாராட்டுக்கள்.
Story is excellent. Please keep it up Anna. The theme of the story is appreciable. Viji (Malaysia)
Post a Comment