Sunday, September 16, 2007

பேட்டை துள்ளி ...

    "நீங்க கன்னி சாமி வேற, மலைக்கு போயிட்டு வந்தவுடன் கண்டிப்பா மாற்றம் தெரியும் பாருங்களேன்" என்று சண்முகம் சொல்வதை ஊர் தலைவர் நவநீதகிருஷ்ணன் அமைதியாகக் கேட்டு கொண்டிருந்த போதே டெலிபோன் மணி ஒலிக்கத் தொடங்கியது. "நல்ல சகுணம்" என்று கூறியவாறே போனை எடுத்தவருக்கு கோயில் குருக்கள் சொன்ன செய்தி இடியாய் ஒலித்தது. உடனடியாக அப்துல்லாவைக் கூட்டி வர ஆளை அனுப்பினார். "சாமியே சரணம்" என்று மனதில் கூறி கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு நவநீதகிருஷ்ணன் அப்துல்லாவைப் பார்த்து கேட்டார். "உம்ம புள்ள அன்வர் பண்ண காரியத்த பார்த்தீரா?". "ஏதோ படிச்ச புள்ள, தெரியாம பண்ணிட்டான், கொஞ்சம் பொருத்துக்கோங்க" என்றார் அப்துல்லா பரிதாபமாக. "என்னய்யா படிச்ச புள்ள, என்னதான் தாயா புள்ளையா பழகினாலும் எங்களோட பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் விட்டு குடுக்க முடியாது, தெரியுமா? ஆராய்ச்சி குறிப்பு எடுக்கறேன்ற பேர்ல அவன் எங்க கோயிலுக்குள்ள போனது பெரிய தப்பு, இதுக்கு உண்டான தண்டனையை கொடுத்தே ஆகணும். நான் இன்னிக்கு மலைக்கு போறேன், வந்து இந்த பஞ்சாயத்தை வச்சிக்கிறேன்" என்றவாறே விருட்டெனக் கிளம்பி போனார்.

  இது அவருக்கு முதல்மலை, அன்று இரவு அன்னதானம் எல்லாம் தடல்புடலாக முடிந்து, நவநீதகிருஷ்ணன் தன் குழுவுடன் பயணப்படும் போது நள்ளிரவைத் தாண்டி விட்டது. ஆனால் அவர் மனது இன்னமும் அன்வருக்கு என்ன தண்டனைக் கொடுப்பது என்று தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தது. "மலையிலிருந்து வந்ததும் முதல்ல கோயிலுக்கு வெள்ளை அடிச்சு குருக்களிடம் சொல்லி கும்ப அபிஷேகம் பண்ணிடனும், இதுக்கு உண்டான எல்லா செலவையும் அன்வரையே குடுக்க சொல்லணும், அதுதான் சரியான தண்டனை" என்று முடிவு செய்து அப்படியேத் தூங்கிப் போனார்.

    காலையில் அனைவரும் எருமேலி வந்து அடைந்தனர். இவர் கன்னி சாமி என்பதால், கண்டிப்பாக பேட்டை துள்ள வேண்டும் என குருசாமி சொல்லியிருந்தார். இவரும், "சாமியே அய்யப்பா" என பேட்டைத்துள்ளி ஆடிக்கொண்டே தன் குழுவினரைத் தொடர்ந்து சென்றார். ஒரு இடத்தில் எல்லா சாமிகளும் வரிசையாக உள்ளே சென்று வந்து கொண்டிருந்தனர். பக்கத்திலிருந்தவரிடம் மெல்ல கேட்டார், "என்ன சாமி இது, மசூதி மாதிரி இருக்கு, இங்க எல்லாம் போகணுமா?". "அட, நீங்க கன்னி சாமி இல்லயா, அதுதான் விவரம் தெரியல, இதுதான் வாவர் சன்னதி, வாவரும் அய்யப்பனும் தோழர்கள், எல்லா அய்யப்ப பக்தர்களும் வாவர் சன்னதிக்கு போயிட்டுதான் மலையே ஏறுவாங்க" என விளக்கம் அளித்தார். நவநீதகிருஷ்ணனுக்கு யாரோ பொறியில் அடித்த மாதிரி இருந்தது, அந்த சாமி சொன்னதைக் கேட்டுக் கொண்டே உள்ளே சென்று சாமி கும்பிட்டு விட்டு வந்தார். வெளியே வரும் போது முஸ்லீம் பெரியவர் ஒருவர் எல்லா சாமிகளுக்கும் விபூதிப் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்துல்லாவே அங்கு நின்று, "என்ன சாமி நல்லா இருக்கீங்களா?" என்று கேட்பது போல இருந்தது. "மலைக்குப் போனால் மாற்றம் தெரியும்" என சண்முகம் கூறியது சரிதான் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். ஊருக்குப் போனவுடன் தன் முழு செலவில் கோயிலுக்கு வெள்ளை அடிச்சு குருக்களிடம் சொல்லி "அய்யப்பன்-வாவர்" பூஜை ஏற்பாடு செய்து அப்துல்லா சமூகத்தையும் அழைத்து அமர்க்களப்படுத்த வேண்டும் என முடிவு செய்து குழுவினரைத் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார்.

1 comment:

Unknown said...

Good anecdotal story... Writing nicely RK... You hv goood story telling skills.. Just hv to spell check in one or two places