Sunday, September 9, 2007

ஊருக்குதான் உபதேசம் ...


ங்கும் தமிழ், எதிலும் தமிழ், எல்லாரும் தமிழில்தான் பேச வேண்டும், இனி சோறு போடுன்னுதான் கேட்கணும், சாதம் போடுன்னு யாரும் சொல்லகூடாது என காரசாரமாக பேசி முடித்தார் அழகுதாசன். கூட்டம் பலமாக கை தட்டி ஆர்ப்பரித்தது. அடுத்து கட்சித் தலைவர் தமிழ்மாறன் பேச வந்தார். அழகுதாசனை எனக்கு இளம்பிராயம் முதல் தெரியும். அவங்க அம்மா வச்ச சுந்தரதாஸ் என்ற பெயரையே தன் தமிழ் ஆர்வத்திற்காக அழகுதாசன் என மாற்றிக் கொண்டவர். அவர் முன்னிருத்தி நடத்தும் இந்த பிற மொழி அழிப்பு போராட்டத்திற்கு ஊரார் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன் என கூறி அமர்ந்தார். கூட்டம் முடிந்து வட்டம், ஒன்றியம் என அந்த பகுதி கட்சி நிர்வாகிகள் தலைவரிடம் பேச காத்திருந்தனர். அழகுதாசன் முறை வந்தது. என்னய்யா அழகு? பேச்செல்லாம் அசத்தலா இருந்தது, உனக்கு கட்சியில பெரிய எதிர்காலம் இருக்கு, கடுமையா உழைக்கணும், அப்புறம் சொல்லு, குடும்பம் எல்லாம் எப்படி இருக்கு என்றார். உங்க ஆசியில எல்லாரும் நல்லா இருக்காங்கய்யா, பையன் என்ஜினிரியிங் முடிச்சிட்டு வீட்டுலதான் இருக்கான், இப்ப கூட டெல்லியில நம்ம தம்பி மந்திரியா இருக்கற துறையில இருந்து இன்டர்வியூ வந்திருக்கு, நீங்க பார்த்து சொன்னீங்கன்னா கொஞ்சம் சவுரியமா இருக்கும் என விண்ணப்பித்தார். உனக்கு இல்லாமயா, நான் இப்பவே போன் போட்டு சொல்லிடரேன் அவன நாளைக்கே டெல்லி போக தயாராக சொல்லு என தலைவர் சொல்ல கேட்டு, அழகுதாசன் அப்படியே தலைவரின் காலில் விழுந்தார். எல்லாம் முடிந்து வீட்டுக்கு போகும் போது, சக உடன்பிறப்பு ஒருவன், அய்யா, தம்பி டெல்லிக்கு எல்லாம் போனா ஹிந்தி தெரியணுமே, எப்படி சமாளிக்கும் என கேட்டான். அட நீ வேற, நான் என்ன அவ்வளவு விவரம் இல்லாதவனா? பையன சின்ன வயசில இருந்தே ஹிந்தி டியூசன் எல்லாம் போட்டு தயார்படுத்தி வச்சிருக்கேன், இந்தியாவுல எந்த மூலைக்கு போனாலும் பொழச்சிக்குவான் என்றார். உடன்பிறப்பும், அதான பார்த்தேன், அய்யா விவரம் இல்லாம இருப்பீங்களா என வழிந்தான். சரி, சரி, விடியறதுக்குள்ள ரயில்வே ஸ்டேசன், போஸ்ட் ஆபிஸ், மைல் கல்லுன்னு ஒரு இடம் விடாம சுத்தமா தார் பூசிரணும், வேலையெல்லாம் முடிஞ்சி காலையில வந்து பாரு என உடன்பிறப்பின் கையில் நூறு ரூபாயை குடுக்க அவனும் சந்தோசமாக கிளம்பினான்.

1 comment:

Agathiyan John Benedict said...

"பொளப்பு" நடத்தத் தெரிஞ்ச தலிவருங்க...