Tuesday, November 6, 2007

குடியானவ ராசா




கிழக்கால கம்மாக்கரை
தண்ணியில்ல வறண்டு போயி
ஆகிப்போச்சு சும்மாக்கரை
மழை பேய்ஞ்சு பல வருசமாச்சு
ஆடு மாடு மேய்ச்சி திரியும் இளவட்டம்
கில்லியாட இடமுமிங்கே தோதாச்சு

மேற்கால மாரியாக் கோயில்
வருசம் கண்டா திருவிழா
அதுக்கொண்ணும் குறைச்சலில்லை
இங்க அரிசி சோத்துக்கே வழியில்லை
ஆனா எம் பொஞ்சாதி
மாவிளக்கு போட மட்டும் தப்பவில்லை

குறுக்கால அரை கிலோ மீட்டர்
கூரை வீடு மச்சி வீடுன்னு
ஊரு ஜனமும் பெருகிப் போச்சு
அப்பன் வழி என் சொத்து
அரை ஏக்கர் மேட்டாங்காடாச்சு
பேருக்குதான் விவசாயி
பயிருக்கே வழியில்லாம போச்சு

காத்தால குடிக்கத்தான்
குளுகுளுன்னு கம்பங்கூழு
பகலெல்லாம் வேர்வை சிந்த
கிழங்கு மில்லு கூலி வேலை
ராவுக்கு உடம்பு நோவு
இருக்குதய்யா
கிளுகிளுன்னு நாட்டு சரக்கு

சாயங்கால வேளையில
பஞ்சாயத்து டிவிதான்
அப்பப்ப கீத்து கொட்டாய்
தரை டிக்கட்டுல சினிமாதான்
எம்.ஜி.ஆர் சிவாஜி போயி
ரஜினி கமலும் வந்தாச்சு
ரேடியோல கேட்ட காலம் போயி
டிவி சீரியலும் வந்தாச்சு

த்தனைதான் மாறினாலும்
எம் பொழப்பு மாறாது
எதிர்பார்ப்பும் ஒண்ணுமில்லை
ஏமாற்றமும் காணவில்லை
ஏன்னா நான் எப்பவுமே
மனசார குடியானவ ராசாதான்

4 comments:

cheena (சீனா) said...

குடியானவர்களின் உண்மை நிலையை விளக்கும் அருமைக் கவிதை. நாடு சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டு காலமாகியும், அறிவியல் வளர்ச்சிகள் ஆயிரம் கண்டும் இன்னும் கிராமப்புற விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயர வில்லையே என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்ட அனுபவக் கவிதை அருமை. வாழ்க - தொடர்க

Agathiyan John Benedict said...

இயல்புக் கவிதை; உண்மைக் கவிதை; நல்ல கவிதை.
இது போன்ற கிராமியக் காட்சிகளை கவிதையாக்கும்போது, "ரிதம்" இருக்குமாறு பார்த்துக்கொண்டால், வாசிப்பதற்கு மிகச் சிறப்பாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.

Ravikumar Veerasamy said...

சீனா, ஜான் - தங்கள் விமர்சன கருத்துகளுக்கு நன்றி.

ஜான் - நீங்க சொன்னது மாதிரி, கொஞ்சம் எதுகை மோனை இருந்தா நல்லா இருக்கும். அடுத்த கவிதையில முயற்ச்சிக்கிறேன்.

Ramana said...

unnakkul ivalluvu thiramai ya ? Wish you all the best nee innum niraya eluthanum- Un mama