Thursday, November 8, 2007

சரவெடி


என் நண்பர் கரண் "சரவெடி" என்ற தலைப்பைக் கொடுத்து கதை எழுத சொன்னார். கதை எழுத காரணமாக இருந்த நண்பர் கரணுக்கும், மற்ற ஏனைய வாசக நண்பர்களுக்கும் என் குடும்பத்தார் மற்றும் என் சார்பாக "தீபாவளி நல்வாழ்த்துக்கள்".


கையில் இருந்த நூறு ரூபாயை திரும்ப திரும்ப எண்ணிக் கொண்டிருந்த பாலு அப்பாவின் குரல் கேட்டு நிமிர்ந்தான். எலே நூறு முறை இல்ல ஆயிரம் முறை எண்ணுனாலும் நூறு ரூவாதான் இருக்கும், திருப்பி திருப்பி எண்ணுனா நோட்டு என்ன குட்டியா போடும். சீக்கிரம் கடைத்தெருவுக்கு போயி பட்டாசு வாங்கியா. இப்பமே சொல்லிப்புட்டேன், தம்பி தங்கச்சி எல்லாரும் வெடிக்கற மாதிரி கம்பி மத்தாப்பூ, சங்கு சக்கரம்னு வாங்கு. ஆன வெடி பூன வெடின்னு வாங்கிட்டு வந்து நின்ன, அப்புறம் தீவாளி உனக்குதான். நான் இந்த டைய்லர் கடைக்கு போயி துணி வாங்கிட்டு வரதுக்குல்ல வந்துறணும். அங்கிட்டு இங்கிட்டு பராக்கு பார்க்காம சீக்கிரம் வா என்று கூறியவாறே கிளம்பினார். குடுத்தது நூறு ரூவா, இதுல ஆயிரத்தெட்டு கண்டிஷன் வேற, முணகிக் கொண்டே இவனும் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். பட்டாசு விக்கிற விலையில மத்தாப்பூ சங்கு சக்கரம் வாங்குனாலே நூறு ரூவா பத்தாது, இதுல எப்படி நாம சரமெல்லாம் வாங்கறது. இந்த வருசமும் எதுத்த வூட்டு நாகராஜு வெடிக்கறத வேடிக்கை பார்க்க வேண்டியதுதான் என்று மனதுக்குள் எண்ணியவாறே கடைதெருவை வந்தடைந்தான்.

கடைத்தெருவே களை கட்டியிருந்தது. நடக்கவே வழியில்லை. மக்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது. டேய் பாலு, கூடப் படிக்கும் சேகரின் குரல் கேட்டது. எலே பட்டாசு வாங்க கிளம்பிட்டியாலே. இங்க எல்லாம் வாங்காதே, ஊருப்பட்ட விலை சொல்லுவாங்க பழைய பட்டாச கட்டிருவாங்க. நம்ம பாளையம் அண்னாச்சி பெரிய கடை போட்டிருக்காரு, அங்கிட்டு போ, விலையும் கம்மி, பட்டாசும் புதுசா இருக்கும். சொல்லிக் கொண்டே காற்றாய் மறைந்தான். பாலுவுக்கும் அதுவே சரியெனப்பட்டது. கூட்டத்தில் ஊர்ந்து அண்ணாச்சி கடையை வந்தடைந்தான். ஆளுயரத்துக்கு பலகை கட்டி மேடை போல கடையை போட்டிருந்தார்கள். பட்டாசு எடுத்து குடுத்து பில் போட பல ஆட்கள் மேடை மேல் இருந்தனர். இவனும் அப்பா சொன்ன மாதிரியே மத்தாப்பூ சங்கு சக்கரம் எல்லாம் எடுத்து கூடவே ஒரு ஹண்ட்ரட் வாலா சரத்தையும் எடுத்து குடுக்க சொல்லி கேட்டான். நூத்தி பதினேழு ரூவா ஆச்சு என்றார் பில் போடுபவர். இவன் நூறு ரூபாயை மட்டும் தயங்கிபடியே நீட்டினான். அப்ப இந்த சரம் எல்லாம் வராது, வேணும்னா இந்த ஊசி வெடி ஒரு பாக்கெட் போடறேன் என்று சொல்லி பையில் போட்டு மீதிக் காசை கொடுத்தார். சரி, நமக்கு அவ்வளவுதான் என்று திரும்புகையில் பின்னால் இருந்தவரின் கை பட்டு இவன் கையிலிருந்த பை நழுவி பட்டாசு எல்லாம் கீழே விழுந்து மேடைக்கருகில் ஆங்காங்கே சிதறியது. இவனும் சிதறிய பட்டாசுகளை ஒவ்வொன்றாக எடுத்து பையில் போடும் போதுதான் கவனித்தான் மேடைக்கடியிலும் சில சிதறியிருந்தது. உடனே மேடைக்கடியில் நுழைந்து சிதறிய பட்டாசை எடுத்து பையில் போடும் போதுதான் அவன் கண்ணில் பளபளவென அந்த சரக்கட்டு பட்டது. இது நம்ம வாங்கலியே, தவுசண்ட் வாலா மாதிரி இருக்கே. சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்து விட்டு அதையும் எடுத்து பையில் போட்டுக் கொண்டு விடுவிடுவென அந்த இடத்தை காலி செய்தான்.

வழியெல்லாம் ஒரே யோசனை. ஒருவேளை அண்ணாச்சி வேற யாருக்கோ போடறத தவறா நம்ம பையில போட்டுட்டாங்களோ. இல்ல நம்மல மாதிரி யாரோ தவற விட்டிருப்பாங்களோ. அப்பா கேட்டா என்ன சொல்றது. இத எப்படி எங்க ஒளிச்சி வைக்கிறது. ஊருக்கு வெளியில் உள்ள பாழடைந்த புளியமர பங்களா உடனே ஞாபகத்துக்கு வந்தது. நண்பர்களுடன் அவ்வப்போது விடுமுறையில் புளி அடிக்க செல்வது வழக்கம். அங்கு யாரும் வசிப்பதில்லை. அதுதான் சரியான இடம். இப்ப வச்சிட்டு நாளைக்கு வந்து எடுத்து அங்கய கூட வெடிக்கலாம். அதுவே நல்ல யோசனையாக பட, வேக வேகமாக நடந்து புளியமர பங்களாவை வந்து அடைந்தான். அங்குள்ள இடிந்த திண்ணை ஒன்றின் அடியில் மறைவாக வைத்து விட்டு திரும்பியவனை ஒரு அதட்டல் குரல் தடுத்தது. யாருலே அது, இங்க என்னலே பண்றே? இல்லண்ணே, புளியங்கா பொறுக்க வந்தேன் என்று கூறிவிட்டு வேகமாக நிற்காமல் ஓட்டமெடுத்தான்.

எலே பழனி, யாருடா அது, பின்னால் தள்ளி வந்து கொண்டிருந்த மணி கேட்டான். யாரோ பொடிப் பையன் புளியங்கா பொறுக்க வந்திருப்பான் போலிருக்கு என்றான் பழனி பதிலுக்கு. சரி அத விடு நீ போன வேலை கச்சிதமா முடிஞ்சுதா? இது மட்டும் சக்சஸ் ஆயிடுச்சுன்னா, அப்புறம் இன்டெர்நேஷனல் லெவல்ல நாம பெரிய ஆளுக ஆயிரலாம் என்றான் மணி. அதெல்லாம் கச்சிதமா முடிச்சுட்டேன், யாரும் பார்க்காத மாதிரி இடத்தில சீக்ரெட்டா வச்சிட்டு வந்திருக்கேன் என்றான் பதிலுக்கு பழனியும். சரி வா, ஒரு ரவுண்ட் போடலாம் என்றவாறே மடியிலிருந்து பாட்டிலை எடுத்து இரண்டு கிளாஸில் ஊற்றினான். கூடவே முனியாண்டி விலாஸ் பிரியாணி பொட்டலத்தையும் பிரித்து வைத்தான். இருவரும் இப்பவே ஒரு லெவலுக்கு போக ஆரம்பித்தார்கள்.

"டமால்" "டமால்" "டமால்". தீவாளி வந்தா இது பெரிய இம்சடா, தூங்கக் கூட முடியாது, டேய் பாலு போய் படுரா என்றார் அப்பா. பாலுவும் அடுத்த நாள் காலை அந்த சரவெடியை எப்படி வெடிப்பது என்று எண்ணிக்கொண்டே தூங்க ஆரம்பித்தான்.

அடுத்த நாள் காலை, ஊரே பரபரப்பாக இருந்தது. லோக்கல் பேப்பரில் தலைப்பு செய்தி கொட்டை எழுத்துகளில் வெளியாயிருந்தது. நகரின் முக்கிய இடங்களில் குண்டு வைத்து தகர்க்க சதி. பழனி, மணி என்ற 2 சமூக விரோதிகள் புளியமர பங்களாவில் நாட்டு குண்டு தயாரித்துக் கொண்டிருந்தபோது, குண்டு தவறி வெடித்து இறந்தனர். குண்டை தவுசண்ட் வாலா பட்டாசு பேக்கில் வைத்து வெடிக்க திட்டம் போட்டுள்ளதாகவும் புலன் விசாரணையில் தெரிகிறது. இவர்கள் பிண்ணனியில் யார் என போலீஸார் தீவிர விசாரணை நடத்துகிறார்கள். இதைப் படித்த பாலுவுக்கு மட்டும் தெளிவாக புரிந்தது தான் எடுத்து வந்தது என்னவென்று. அமைதியாக தான் வாங்கி வந்த கம்பி மத்தாப்பை தம்பிக்கு பிடித்துக் காட்ட ஆரம்பித்தான்.

2 comments:

Karan said...

Ravi Garu:

Thanks for accepting and executing my request in such a short notice. Much appreciated. Namma "SaraVedi" kathai "OosiVedi-yagaa" pogavaillai...Mikka Nandri...

Baski said...

Ravi Keep writing!..Good style!