அவனுக்கும் அவர்தான் ஆசிரியர். அதுவும் டீச்சருடைய அப்பாவும் அவனுடைய தாத்தாவும் ஒரே பள்ளியில் ஆசிரியர்களாக வேலைபார்த்தவர்கள். அவரும் அவனுடைய அம்மாவும் சிறுபிராயத்தில் ஒரே வகுப்பில் படித்தவர்கள் என இவனுக்கும் டீச்சர் குடும்பத்துக்கும் நிறையவே சம்பந்தம் உண்டு. அதனால் சொல்லவே தேவையில்லை, அவனுக்கு எப்போதும் சிறப்பு கவனிப்பு, கண்காணிப்பு உண்டு. இவன் சரியாகப் படிக்காமலோ அல்லது மார்க்குக் குறைந்தாலோ டீச்சர் அவனை அழைத்து கருணைப் பார்வையிலேயே அழவைத்து விடுவார். இவனும் வெட்கத்தில் நகத்தைக் கடித்துக்கொண்டே நீட்டி நெளிந்து ஏதாவது சொல்லிச் சமாளிப்பான்.
அவனுக்கு ஒரு கெட்டப் பழக்கம் உண்டு. பாட சம்பந்த வேலைகளில் ஆழ்ந்து யோசித்தாலும் சரி இல்லை பரீட்சை டென்சனானாலுன் சரி இல்லை சும்மாவே நேரத்தைக் கழிப்பதானாலும் சரி உடனே தன்னுடைய நகத்தை நறுக் நறுக் எனக் கடிக்க ஆரம்பிப்பான். அதுவும் அந்த நகத்தை ஒட்டியுள்ள சதையை வேறு கடித்துத் தின்பான். அதிலென்ன அவன் ருசி கண்டானோ தெரியவில்லை. அப்போது, விரலை வளைத்து முகத்தை வளைத்து அவன் வாய் மற்றும் விரலுக்கு நடுவில் ஒரு போரே நடக்கும். டீச்சரும் , “டேய் , நகம் கடிப்பது சதையை உட்கொள்வது எல்லாம் சுகாதாரமான செயல் இல்லை”, எனப் பலமுறை சொல்லி பார்த்தார்கள். அவனும் அதைக் கேட்பதாக இல்லை. “உனக்கு விரலில் பெரியக் கட்டுப்போடுவேன்”, எனப் பொய்யாக மிரட்டியும் பார்த்தார்கள். வீட்டில் சொல்வதாகவும் சொன்னார்கள். ஆனால் அவன் அதற்கெல்லாம் அசரவில்லை. அவன் தனது “கடி” வேலையைத் தவறானதாக இருந்தாலும் மிகச் சரியாகச் செய்யத் தவறியதேயில்லை.
ஒரு நாள் சுவாரசியமாக வகுப்பில் நகம் கடித்துக்கொண்டிருந்த அவனை அவர் தன்னிடம் அழைத்தார். அவனும் அவர் முன்பு கையைக் கடித்துக்கொண்டே வந்து நின்றான். அவரும் அவனிடம்,
“வாங்க சார் வாங்க, நல்லா கடியுங்க , அப்படியே கடிச்சிட்டே இருங்க ”,
என்றவாறே திடீரென தன் கைப்பையில் இருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து அவன் எதிரில் வைத்து,
“இப்ப கடி , நல்லா கடி, உன் முகம் போகிற அஷ்டக்கோணலை நீயேப் பாரு , ரசிச்சுப் பாரு . நீ விரலைக் கடிக்கும் போது இப்படிதான் இருக்கும் உன்னைப் பார்க்கிறதுக்கு - திருஷ்டி பொம்மை மாதிரி”,
என அவர் சொன்னபிறகுதான் சந்திரமுகியாக இருந்த அவன் முகத்தை அவனே கொஞ்சம் கூர்ந்துப் பார்த்தான். அத்தனை கோணல் மாணலாக அவன் முகத்தை அவன் இதுவரை கண்டதேயில்லை. அவனாலேயே அதைக் காண சகிக்கமுடியவில்லை. விரலைக் கடிக்கும் போது அவன் தாடை மேலும் கீழும் போகப் பற்கள் அசிங்கமாகத் தெரிய, அதற்கேற்ப அவன் மூக்கு விகாரமான ஒரு வடிவுக்கு மாறுவதைப் பார்க்கும் போது அவனுக்கே அவனைப் பார்க்க மிக அசிங்கமாகவும் பயமாகவும் இருந்தது.
“எவ்வளவு அழகான உன்னுடைய முகத்தை இப்படியா பண்றது , இனி நகத்தைக் கடிக்கலாமா இல்லை வேணாமான்னு நீயே முடிவு பண்ணிக்க ”,
என டீச்சர் ஒரு தீர்மானமாகச் சொல்லிவிட்டு,
“நீ இப்ப போகலாம்”
என அவனை அனுப்பி வைத்தார். அவனுக்கு ஏதோ பிரமையில் இருந்து மீண்டு வந்தது போல இருந்தது. அன்று முதல், டீச்சரால் எப்போதும் அவனுடைய அழகான ஒழுங்கு முகத்தை மட்டுமே காண முடிந்தது.
No comments:
Post a Comment