Tuesday, January 7, 2025

ஸ்வரங்கள் - ஸ்ருதி 3

 ஸ்ருதி 3


    
டைசி வாய் காஃபியை ஒருதுளிக் கூட விட்டுவைக்க அவருக்கு மனமில்லை. அப்படியே டம்பளரை செங்குத்தாக நிமிர்த்தி ஒரு உலுக்கு உலுக்கி தீர்த்தம் போல அந்தக் கடைசித் துளியை நாக்கில்விட்டு உச்ச்சுக் கொட்டினார். காலியான டம்பளரை கீழே வைத்து விட்டு அம்புஜத்திடம், "ஏண்டி நான் ஆத்துல சும்மாத்தானே ஒக்காந்திண்டுருக்கேன். நானும் சித்த அவாளோட கோயில் வரைக்கும் ஒரு நடை காலார போயிட்டு வரட்டுமா?" எனக் கேட்டதுதான் தாமதம், உடனே அம்புஜம் மாமி பதிலுக்கு.

    "இதென்னா புதுசா இருக்கு. ஒமக்கு கிறுக்கு ஏதாவது புடிச்சிருக்கா. அதெல்லாம் ஒங்களுக்கு ஒத்து வராது. அவாளெல்லாம் யாரோ? தெரியாதவளோட எப்படிப் போவேள்? காலம் கெட்டுக் கிடக்குது. புதுசுபுதுசா தொத்து வேற பரவுதாம். கூட்டம் அது இதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது. அந்த வேலையெல்லாம் ஒன்னும் வேணாம். வேடிக்கை பார்த்தேளில்லையோ அது போறும். கோயிலுக்கு போறராம். அதுவும் தனியா. எங்கேருந்து இந்த ஐடியாவெல்லாம் வருதோ. வைகுண்ட ஏகாதசி வரப்போகுதில்லையா அப்போ நானே கூட்டிண்டு போறேன். பக்கதாத்து மாமியும் வரேன்னா. அப்பப் போயிக்கலாம். சும்மா திண்ணையில ஒக்காந்து பராக்கு பாருங்க. இந்த பேப்பரைப் படியுங்க. டிஃபன் ரெடியானதும் சொல்றேன். ஸ்நானம் பண்ணிண்டு வந்து சாப்பிடலாம். பிறகு பேங்கு வரைக்கும் போவணும். கொஞ்சம் வேலை இருக்கு" என மாமி ஒரு தவுசண்டுவாலா அளவுக்குப் படபடத்துவிட்டு, கிட்டத்தட்ட 144 தடை உத்தரவையும் மீறிய ஒரு தடையைப் போட்டுவிட்டு, அவருடைய பதிலுக்குக் காத்திராமல், காலி டம்பளரை எடுத்துக் கொண்டு, அடுப்படியை நோக்கி நடையைக் கட்டினாள்.

    அப்படி என்னதான் அவர் கேட்டுவிட்டார். பக்கத்தில் உள்ள கோயிலுக்குத்தானே போகிறேன் என்றார். அவர் குழந்தையா என்ன? மூன்று மாதத்துக்கு முன்பு வரை கோர்ட்டு, ஆபிஸ் என தனியாகத்தானே சுற்றிக் கொண்டிருந்தார். இப்போது மட்டும் ஏன் திடீரென இந்தக் கட்டுபாடு. வேலைக்கு மட்டும்தான் செல்வதில்லை. அதைத் தவிர வேறு எந்த மாற்றங்களும் இல்லையே. ஒரு மனுசன் ரிட்டயர்ட்டு ஆகிவிட்டால் இதுதான் நிலைமையா. எல்லோருக்கும் இப்படித்தானா இல்லை இவருக்கு மட்டும்தான் இப்படி நடக்கிறதா என அவர் மனதிற்குள்ளே ஒரு பெரிய வாக்குவாதமே நடந்து கொண்டிருந்தது.

    எது எப்படியென்றாலும், மாமி சொன்னால் சுப்ரீம் கோர்ட்டு ஜட்ஜே சொன்னது மாதிரி. அங்கு மறு அப்பீலே கிடையாது. கருணை மனுக்கள் சமயத்தில் ஏற்கப்படும். ஆனால் பதில் சாதகமாக வராது என அவருக்கும் நன்றாகவேத் தெரியும். ஆனால், ஒன்று, அவள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். மாமி ஒன்றும் இவருக்கு சளைத்தவளில்லை. பதினெட்டு வயதில் கல்யாணம் செய்துகொண்ட பிறகு நான் படித்தே ஆகவேண்டும் என ஒற்றைக்காலில் அடம் பிடித்து அப்போதே பி.ஏ வரை தபால் முறையில் படித்து முடித்தவள். அவருக்கு இணையாகத் தானும் வேலைக்குப் போகவேண்டுமென காரியதரிசியாக தாசில்தார் ஆபிசில் வேலைக்கும் சேர்ந்தாள்.

    வாசனும் வாசவியும் குழந்தைகளாக இருக்கும் போது ஏதோ ரெவின்யூ கேம்ப் என்று ஒரு நாள் மாமி வீட்டிற்கு மிகவும் தாமதமாக வந்தாள். அவள் வருவதற்குள் குழந்தைகளை சமாளிக்க இவர் பட்ட கஷ்டத்தின் பிரதிபலிப்பு அடுத்த நாளே மாமி வேலைக்கு ராஜினாமா போட்டுவிட்டாள். அதற்கு பிறகு மாமியின் ராஜாங்கம் செல்வாக்கு எல்லாமே நாலு சுவற்றுக்குள்தான். ஆனால் அவள் வார்த்தைக்கு மறு பேச்சே இருக்காது. அவருக்கு கம்பெனி சட்டம் மட்டும்தான் தெரியும். ஆனால் மாமிக்கோ அதைத் தவிர மற்ற எல்லாமே அத்துப்படி. மளிகை, காய்கறி, பால், வேலைக்காரி, வீட்டு வேலை செய்பவர்கள், பேங்க் அக்கவுண்டு, மாதத் தவணைகள், பிள்ளைகள் படிப்பு, ஊரிலுள்ள நில பராமரிப்பு என எல்லாமே மாமியின் மேனேஜ்மெண்டுதான். ராமஜெயத்திற்குண்டான ஒரே ஒரு வெளிவேலை என்றால் தேர்தலில் ஓட்டு போடுவார் அவ்வளவுதான். அதுகூட சமயத்தில் மாமி சொல்லிவிடுவாள் யாருக்கு ஓட்டு போடவேண்டுமென.

    "ஐயா சாமி, நல்லா இருக்கீங்களாய்யா!" என்ற பரிட்சையமான ஒரு குரல் அவரை யோசனையில் இருந்து மீட்டது.  ஐயா எனக் கும்பிட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான் மாடசாமி. அவன்தான் ஊரில் உள்ள இவர்கள் நிலத்தை பராமரித்து வந்தான். பூர்விக சொத்தான பத்து ஏக்கரில் எட்டு ஏக்கரை வருசக் குத்தகைக்கு விட்டுவிட்டு இரண்டு ஏக்கரை மட்டும் மாமியே மாடனை வைத்து பராமரித்து வந்தாள். "பொங்கல் வரும் பின்னே மாடன் வருவான் முன்னே", என அவருக்கு நன்றாகத் தெரியும். "வாடா வா. என்ன காலம்பரயே வந்துருக்கே. பிரயாணம் எல்லாம் சுகமா. ஒக்காரு அப்படி. அம்புஜம், இங்கே வாடி, யாரு வந்துருக்கா பாரு!" என அடுப்படியை நோக்கி ஒரு சப்தம் கொடுத்தார்.

  - இசை தொடரும் ...

[எழுத்துப் பிழைகளைப் பொறுத்தருளவும், சுட்டிக்காட்டவும்] 

Monday, January 6, 2025

ஸ்வரங்கள் - ஸ்ருதி 2

ஸ்ருதி 2

    மார்கழி மாதக் குளிருக்கு தூபம் போடுவது போல நேற்று பெய்த மழையின் ஈரம் தன் விசுவாசத்தைக் குளிர்காற்றோடு கலந்து காண்பித்ததை வராண்டாவில் அமர்ந்து அம்புஜத்தின் காஃபியை சுவைக்க இருந்த ராமஜெயத்தால் நன்கு உணரமுடிந்தது. 

    மார்கழி பஜனைக் கோஷ்டி ஒன்று அப்போதுதான் வீதியில் பள்ளியெழுச்சிப் பாடல்களைப் பாடிக்கொண்டே வீட்டைக் கடந்தார்கள். இவருக்கு என்னவோ அது ஒரு புதிய தினுசாக இருந்தது. இத்தனை வருடங்கள் இதைப் பார்த்திருந்தாலும் காதிலே கேட்டிருந்தாலும் மனம் அதிலெல்லாம் லயிக்காமல் எப்போதும் ஏதாவதொரு கேஸைப் பற்றித்தான் அலசிக்கொண்டிருக்கும். ஆனால் இன்று, ஏனோ அவர் ஓய்வு பெற்றவராகி நிற்பதாலோ, மனது வேறு எங்கும் அலையாததாலோ, அந்த கோஷ்டி கானத்தை அவர் மனம் ஆற அமர நின்று லயித்து ரசித்தது. "ஆஹா, மனுசாளோட மனசுக் கூட ஆடி ஓடி அடங்கினாதான் லோகத்தோட அருமை புரியறது" என வாயில் முணுமுணுத்துக்கொண்டே ஒரு குழந்தையைப் போல அந்தக் கூட்டம் அவர் வீட்டைக் கடந்து போகும் வரை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த கோஷ்டியில் சென்ற சிலர் பதிலுக்கு இவரைப் பார்த்து ஒரு சினேகித புன்முறுவலை உதிர்த்துவிட்டு கடந்து சென்றனர். 

    பள்ளியில் படிக்கும்போது அக்ரஹாரத்தில் அக்கம்பக்கதாத்து பஜனை கோஷ்டி மாமாக்களுடன் பாடிக்கொண்டே கோயில் வரைக்கும் போவார். அதுவும் லட்சுமி மாமி வீட்டு பிரசாத முறை நாள் என்றால் தவறாமல் போய்விடுவார். மாமியின் சர்க்கரைப் பொங்கலை நினைத்தால் எப்பவுமே வாயில் எச்சில் ஊறும். அவ்வளவு நன்றாக இருக்கும். அதற்காகவே வருடம் முழுவதும் மார்கழி பஜனை இருக்காதா என அவர் மனம் ஏங்கியதும் உண்டு. பிறகு பள்ளிப்படிப்பு முடிந்து காலேஜ் போக ஆரம்பித்தவுடன் ஏனோ ஒரு சங்கோஜம் வந்துவிட்டது. எல்லாமுமே மாறிவிட்டது. ஸ்டெப் கிராப்பு, பெல் பாட்டம், எக்ஸ்ட்ரா கேன்வாஸ் காலர், பட்டை பெல்ட்டு, தெரு முனையில் வெறுமெனே நின்று நோட்டம் விடுவது, இரவுக் காட்சி, தாமதமாக எழுவது என ஆளையே மாற்றிவிட்டது. அன்று அப்படி விலகிவந்ததுதான், இப்போது மீண்டும் அதிலே லயிக்கத் துடிக்குது. 

    "சர்க்கிள் ஆஃப் லைஃப் என சும்மாவா சொன்னா", என மனதில் நினைத்தவரை ஒரு இதமான காற்று முகத்தில் அடித்து நிகழ்காலத்துக்கு கொண்டுவர அம்புஜத்தின் காஃபியை சுவைக்கத் தயாரானார். 

    "ஏண்டி அம்புஜம் உன் புள்ள வாசங்கிட்ட சொல்லி உன் காப்பிக்கு உடனே ஒரு பேடண்டு போடணுமடி! கையில அப்படி என்னதான் சிதம்பர ரகசிய ரெசிப்பிய ஒளிச்சு வச்சுருக்கறியோ, உன் காப்பியிலேயே என்னைக் கட்டிப் போடுற போ! உன் கைக்கு மாத்தரம் நம்ம சுந்தரத்துகிட்ட சொல்லி இன்சூரன்சு எடுக்கணுமடி!" எனக் காலைக் காஃபிக்கு ஒரு பாசுரத்தைப் பாடிவிட்டு அன்றைய நாளிதழில் உள்ள ஹெட்லைன்சை வேகமாக ஸ்கேன் செய்ய ஆரம்பித்தார்.

    "பாத்து! நேக்கு ஜலதோஷம் புடிச்சிக்க போவுது, நீங்க தெனமும் வைக்கிற ஐஸை கொஞ்சம் நிறுத்துங்கோ" என அம்புஜம் ஒரு எதிர்பாட்டைப் படித்தபடியே அவளுடைய காஃபியையும் எடுத்துக் கொண்டுவந்து அவரருகே நாற்காலியில் அமர்ந்தாள்.

    "ஐஸ் வச்சா நல்லதுதானடி, இளமை சிலுப்பி நிக்குமாம், இங்கிலீஷ்காரன் சொல்லிருக்கான்", என அவர் ரொமாண்டிக்காக சொல்ல பதிலுக்கு அவளும், "பேரன் எடுத்தவா மாதிரியா பேசறேள்! வெளியதான் பெரிய மனுசா! உள்ளுக்குள்ள இன்னும் ஐயாவுக்கு மன்மதனு நெனப்பு" என அவரை அடக்கினாள்.

    ஆஸ்திக்கு ஒரு பிள்ளை ஆசைக்கு ஒரு பிள்ளை என சொல்வார்கள். அது ராமஜெயத்துக்கும் அம்புஜத்துக்கும் நன்கு பொருந்தும்.  ஒரு மகன் ஒரு மகள். மூத்தவன் வாசன் லண்டனில் போய் செட்டிலாகிவிட்டிருந்தான். மகளும் அவனையே தொடர்ந்து ஆனால் ஆஸ்திரேலியாவில் போய் செட்டிலாகிவிட்டாள். இருவருக்கும் தன் பணிக்காலம் முடியும் முன்பே நல்லபடியாக செட்டில் செய்ததில் அவருக்கு எப்பொழுதும் ஒரு திருப்தி, பெருமையும் கூட. அவருடன் ப்ராக்டிஸ் செய்யும் சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு இன்னமும் வரன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். "உனக்கென்னடா சின்ன வயசிலேயே கல்யாணம் பண்ணிட்டு லட்டு மாதிரி புள்ளைகளைப் பெத்து போட்டுட்ட, என்னைய மாதிரி ஒனக்கென்ன லேட் மேரேஜா?"என தன் பால்ய நண்பன் வரதராஜன் இவரை அடிக்கடி கிண்டல் செய்வதுமுண்டு. அவருடைய ஒரே மகளுக்கு இன்னும் சரியான வரன் கிடைக்காமல் இருப்பது கண்டு ராமஜெயத்துக்கு இன்னமும் வருத்தம்தான்.

    ஆனால், பிள்ளைகள் வெளிநாடு சென்று செட்டிலானாலும் இவருக்கு தன்னுடைய பிராக்டிஸ், கிளையண்டுதான் முக்கியம் என பிசியாக இருந்தார். வாசனும் எத்தனையோ முறை அழைத்துப் பார்த்தான் ஆனால் அவர், "இப்ப முடியாதுபா, நான் பிசி" என்று மறுத்து வந்தார். ஆனால் இனி அப்படி மறுக்க முடியாது. அம்புஜத்திற்கும் லண்டன் போய் பேரனுடன் இருந்து வர ஆசைதான் ஆனால் இவரை எப்படிக் கிளப்புவது என அவளும் தன் ஆசையை அடக்கியே வைத்திருந்தாள்.

    ராமஜெயம், அவரின் பெயருக்கேற்பவே அவருக்கு எல்லாமுமே ஜெயம்தான் அவர் ஒரு கேஸில் ஆஜராகிறார் என்றால் அந்த ஜட்ஜுக்கும் கோர்ட்டுக்கும் வேலை குறைந்துவிடும். இவரே எல்லா பாயிண்டையும் சரியாக எடுத்து வைத்து அனைவரின் வேலையையும் மிக எளிதாக்கி விடுவார். பொதுவாக அவர் டீல் செய்வதெல்லாம் கம்பெனி சம்பந்தபட்ட சிவில் கேஸ்கள்தான். தொழிலாளர் பிரச்சனைகள், சம்பளம் போனஸ் தகராறு, கம்பெனி லா சூட் போன்ற விவகாரங்கள்தான். அதனால் ராமஜெயம் என்றாலே தொழிலதிபர்கள் மத்தியில் எப்போதும் ஒரு மதிப்பும் மரியாதையும் அதிகம் இருக்கும்.

    அப்படி பிசியாக இருந்த மனிதர் இப்போது ஓய்வுக்குப் பிறகு என்ன செய்வதென்றே தெரியவில்லை. முதல் இரண்டு மாதங்கள் வெறிப்பிடித்தாற் போல அம்புஜத்தை அழைத்துக் கொண்டு தெற்கிலுள்ள எல்லா கோவில் குளத்துக்கும் போய்வந்தாகி விட்டது. வாசனும் லண்டன் வந்து ஒரு நாலு மாசம் இருக்க சொல்கிறான். ஆனால் குளிர்காலம் முடிந்து வாருங்கள் என அந்த ஏற்பாட்டைத் தள்ளிப் போட்டுவிட்டான். மகள் எங்கேயோ சம்மர் வெக்கேசன் போகிறாளாம். அவள் இன்னும் புதுக்கல்யாண மோகத்தில்தான் இருந்தாள். தானே பிறகு நேரம் கிடைக்கும்போது வந்து பார்ப்பதாகச் சொல்லிவிட்டாள். அதனால் இப்போதைக்கு எங்கேயும் போக முடியாது. இங்கேயே உட்கார்ந்து திண்ணையைத் தேய்க்க வேண்டியதுதான்.

    - இசை தொடரும் ...

[எழுத்துப் பிழைகளைப் பொறுத்தருளவும், சுட்டிக்காட்டவும்]

Sunday, January 5, 2025

ஸ்வரங்கள் - ஸ்ருதி 1


ஸ்ருதி - 1   

    வெளியே நல்ல மழை. அடம் பிடித்து அழும் குழந்தையைப் போல சிணுங்கிக் கொண்டும் சமயங்களில் பலமாக இரைந்து கொண்டும் பெய்துகொண்டிருந்தது. வானிலிருந்து கீழேவிழும் மழைத்துளிகள் நான்தான் பர்ஸ்ட்டு என பள்ளியிலிருந்து ஓடும் சிறார்கள் போல ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக் கொண்டு பாய்ந்து வாசலில் பட்டுத் தெறித்துக் கொண்டிருந்தது. 

    மழையின் ஆரவாரத்தைத் துளியும் பொருட்படுத்தாமல் அம்புஜம்மாள் டிவியில் ஏதோ ஒரு சீரியலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

    “ஏண்டி கஸ்மாலம், துன்றதுக்கு நாஷ்டா எதுனா கீதா” என்று காட்டுத்தனமாகக் கத்தியனை, “யோவ், வேலக்கு போவாம சும்மா பெஞ்சி தேய்ச்சிகினு ரீல்ஸ் பாத்துகினு கீற உனுக்கு நாக்குக்கு சோக்கா நாஷ்டா கேக்குதா! சோறு இன்னும் ஆவல. சித்தப் பொறு” என அக்கம்பக்கம் எல்லாம் கேட்கும் அளவுக்கு அவளும் குரலை உயர்த்தி அவனுக்கு அவள் ஒன்றும் சளைத்தவள் அல்ல எனக் காட்டினாள். 

    “ஏண்டி அம்புஜம் இதெல்லாம் ஒரு பொழப்பாடி! என்னடி சீரியல் இது. வேற நன்ன புரோகிராமே ஒனக்கு பார்க்க இல்லையா! அபிஸ்து, என்ன பாஷைடி அவன் பேசுறான். எல்லாம் அபஸ்வரமாவே இருக்கு. அதையும் நடு ஆத்துல ஒக்காந்துண்டு ஆன்னு பாத்துண்டு இருக்கே! நேக்கு கொஞ்சம் குடிக்க ஜலம் கொண்டுவாடி நான் படுக்கப் போறேன்”என டிவி சீரியலில் மூழ்கியிருந்த அம்புஜத்திற்கு ஒரு ஆர்டரைப் போட்டுவிட்டுத் தன் பெட்ரூமை நோக்கிப் போனார்.  


    ராமஜெயம் ஒரு பெரிய லாயராக இருந்து ஓய்வு பெற்று இன்றோடு மூன்று மாதங்கள் ஆகிறது. எப்போதும் கோர்ட்டு, கேஸு, கிளையண்ட்டு என சட்ட வட்டத்துக்குள் பிசியாக இருந்த மனிதரை இப்போது கால நேரம் வீட்டுக்காவலில் வைத்து வாய்தா வாங்கிக் கொண்டிருந்தது. ஆமாம், தினமும் அவருக்கு நேரத்தைக் கடத்துவதென்பது ஒரு பெரிய சவாலாக இருந்தது. 


    விடியற்காலை பால்காரன் வரும்முன்பே மனிதர் எப்போதும் எழுந்து விடுவார். “கோர்ட்டுக்கா போகப் போறீங்க, ஆத்துல சும்மாதானே இருக்கப் போறேள்! இன்னும் சித்த நாழித் தூங்கினா என்ன கொறஞ்சா போயிடும்” என அம்புஜம் சொல்வதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிட்டு பாத்ரூமிற்கு பல் தேய்க்கப் போய்விடுவார். அம்புஜத்திற்கு அந்த இடைவெளியில் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கலாம் என்றால் அதுவும் முடியாது. உள்ளே மனிதர் ஒரு கிங்காங் ரேஞ்சிற்கு சத்தம் எழுப்புவார். “ஏண்ணா இப்படி வாந்தி எடுக்கற மாதிரி உறுமிறேள்” எனக் கேட்டால் உடனே பதிலுக்கு, “பல்லு தேய்க்கறதுன்னா வெறும் பல்லுக்கு பாலீஷ் போடற சமாச்சாரமில்லைடி. வாய், நாக்கு, பல்லு, தொண்டை எல்லாத்தையும் நன்னா விளக்கி கழுவணும்” என பல்புராணம்தான் பதிலாக வரும். 


    அடுத்து ஒரு பதினைந்து நிமிடத்திற்கு ஹாலில் ஜன்னல் ஓரமாக நின்றுகொண்டு ஆகாயவெளியைப் பார்த்துக் கொண்டே சூரிய நமஸ்காரம் செய்ய ஆரம்பித்துவிடுவார். அவர் விடும் மூச்சு சத்தம் மட்டும்தான் அப்போது கேட்கும். கால்களின் அசைவு அவர் நிற்கும் அந்த தரைக்குக்கூடக் கேட்காது. அவரது அசைவுகள் அவ்வளவு சிரத்தையாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். இவரது நமஸ்கார களியாட்டத்தைப் பார்த்தபிறகுதான் கதிரவனே தன் கரங்களை விரித்து மெட்டிமுறித்து அந்த மேகப்போர்வையை மெல்ல விலக்கிக் கொண்டு ஹாய் என வெளிவருவான். 


    இப்படி அவர் தனது பயிற்சியை முடிப்பதற்கும் வாசல் கேட்டில் டிங் என மணி அடித்து அன்றைய நாளிதழை ராக்கெட் போல பேப்பர்பையன் வீசிவிட்டுப் போகவும் சரியாக இருக்கும். அவர் போய் அந்தப் பேப்பரை எடுத்துத் திரும்புவதற்குள் அடுத்த ஒரு டிங் பால்காரனிடம் இருந்து வரும். “குட் மார்னிங் சார்” என தன் டூவீலரை மெதுவாக நிறுத்தி ஸ்டைலாக ஸ்டாண்டு போடுவான். “இருப்பா அம்மாவை வரச்சொல்றேன்” என அவனிடம் சொல்லிவிட்டு, “அம்புஜம் பால் வந்துடுத்து” எனச் சொல்லி வாயை மூடும் முன்பே, வாசுகி வள்ளுவனிடம் சொன்னது போல, “இதோ வந்துட்டேண்ணா, காஃபி டேபிள் மேல வச்சிருக்கேன். ஆறிடப் போகுது. சீக்கிரம் போய் குடிங்கோ” என தினமும் தான் சொல்லும் டயலாக்கை தேய்ந்த ரெக்கார்டு போல சற்று ஏற்றஇறக்கம் கூடக்குறையச் சொல்லிவிட்டு கேட்டை நோக்கிப் போவாள். 

 

    அவருக்கு காலையில் நமஸ்காரம் செய்து முடித்தவுடனே காஃபி ரெடியாக ஹாலில் இருக்கவேண்டும். அம்புஜத்தின் அக்மார்க் காஃபிக்கு அவர் ஒரு ஆஸ்தான அடிமை என்றே சொல்லலாம். “கையை காலை நல்லா அசைச்சுட்டு ஒரு வாய் சூடா காப்பி குடிச்சாத்தான் வயிறு முக்காம நல்லாப்போவும்” என்பார். அதற்காகவே அம்புஜம் தினமும் கொஞ்சம் பாலைத் தனியாக எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்திருப்பாள். அதில்தான் முதல் காஃபியைப் போடுவாள். புதுப்பால் காஃபி பிறகு காலை டிஃபன் எல்லாம் முடிந்துதான் கிடைக்கும். முப்பத்தைந்து வருட தாம்பத்தியத்தில் இந்த ரொடீனீல் எந்த மாற்றம் இல்லை. 


    பணிக்கு ஓய்வானாலும் இன்றும் அந்த வழக்கம் மாறாமல் தொடர்ந்து அன்றையக் காலையும் விடிந்தது.


    
- இசை தொடரும் ...


[எழுத்துப் பிழைகளைப் பொறுத்தருளவும், சுட்டிக்காட்டவும்]