Thursday, April 17, 2025

கப்பக் கிழங்கு

 


        “வாடி என் கப்பக் கிழங்கே …” 

        அந்தப் பாட்டைத் தெரியாதவங்களே யாரும் இருக்க முடியாது. ‘கப்ப’ அப்படின்னா மலையாளத்துல கிழங்குன்னு பொருள். அப்ப ஏன் கப்பக் கிழங்குன்னு சொல்றாங்க? அந்த ஆராய்ச்சியை பிறகு வச்சுக்குலாம். நாம நம்ம கதைக்கு வருவோம். 

          நம்ம ஊரு மரவள்ளிக் கிழங்கைப் பற்றிய சுவாரசியமான கதைதான் அது. அதைக் குச்சிக் கிழங்குன்னும் நம்ம ஊருபக்கத்துல சொல்லுவாங்க. வருசத்துல ஒரு முறையோ இரண்டு முறையோ நம்மூரு விவசாயிங்க கண்டிப்பா இதை மானாவாரி பயிராக பயிருட்டுருவாங்க. 

          வானத்துக் கொடையான மாரியை நம்பி பயிருடுவதுதான் வானமாரி பயிர். அது இலக்கணப்போலியாக மானவாரின்னு மருவி பின்னாளில் மானாவாரி பயிராடுச்சு.

          குச்சிகிழங்கு பயிருடணும்னா தோராயமா ஒரு ரெண்டுஞாண் அளவுக்குள்ள குச்சியை நறுக்கி மண்ணுல நட்டு வச்சுருவாங்க. அவ்வளவுதான். குச்சி நறுக்கறதுக்குண்ணே தனியா குச்சிவெட்டி ஒண்ணு இருக்கும். ஒரே அளவா நறுக்குவாங்க. நிலத்தை ஒரு உழவு ஓட்டியபிறகு நட்டு வச்ச குச்சி அப்படியே மடமடன்னு இலை துளிர்த்து வளர்ந்துரும். ஆரம்பத்துல தண்ணியைப் பாத்து பாத்து விடணும். குச்சி மண்ணுல புடிச்சிக்கிச்சின்னா பிறகு அது தானா வளர்ந்துரும். ஆரம்ப காலத்துல ஆடு மாடு கடிச்சிராம கவனமாக பாத்துக்கணும். அதே மாதிரி பயிருக்குண்டான தண்ணியை அப்பப்ப பாத்து பாத்து விடணும். பஞ்சகாலத்துல மழையில்லாம ஏமாந்த காலங்களில் குடத்துல தண்ணி எடுத்துட்டு போயி டப்பாவுல தண்ணி மோர்ந்து ஊத்தி வளர்த்த கொடுமைகளும் உண்டு.  ஒருதடவையோ ரெண்டு முறையோ களைகளைப் பாத்து புடுங்கணும். அது நிலத்தைப் பொறுத்து இருக்கும்.

            செடி நல்லா புடிச்சு வளர்ந்தபிறகு பார்க்கறதுக்கு நல்லா அடர்த்தியாவும் உயரமாகவும் இருக்கும். அறுவடைக்குத் தயாரனவுடனே குச்சிப் புடுங்கற நிகழ்வு நடக்கும். அதாவது கிழங்கைப் புடுங்கி எடுக்கற அறுவடை காலத்துல ஆளை வச்சு செடியைப் புடுங்கி கிழங்கை மட்டும் பிரிச்சி எடுப்பார்கள். கிழங்கு பிரிச்சதுக்கப்புறம் மீதமான குச்சியை கொஞ்சம் மாட்டுத் தீவனத்துக்கும் மற்ற ஏதாவது எரிக்கறதுக்கும் பயனாயிரும். குச்சியை வச்சி சின்னப்பசங்க  விளையாடறதும் உண்டு. 

            கிழங்குத் தோலோட இருக்கும் போது ஒருவிதமான ஷைனிங்கா இருக்கும். மெழுகுப் பூசினாற்போல பளபளன்னு. ஆனா கையில ஒட்டாது. கிழங்குப் புடுங்கின உடனே உடைச்சு பச்சையா சாப்புட்டா அருமையா இருக்கும். சாப்பிடும்போதே நம்ம வாயிலே கிழங்குப் பால் தட்டுதெறிக்கும். அந்த சுவையே தனிதான். 

             பிறகு அந்த கிழங்குகளை மூட்டையாக்கி டிராக்டர்லயோ அல்லது மாட்டு வண்டியிலயோ எடுத்துட்டுப் போயி பக்கத்துலுள்ள சேகோ ஃபாக்டரியில விலைக்குப் போட்டுருவாங்க. அந்த வண்டிகளுக்கு ரெண்டு முறை எடை போடணும். காலி வண்டியோட முதல்ல ஒருமுறை அப்புறம் கிழங்கு ஏத்திகிட்டு ஒருமுறை. ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம்தான் கிழங்கோட எடை. கொஞ்சம் கிழங்கை சில்லைறயில மார்க்கெட்டில் விற்பதும் உண்டு. 

           அதுக்குப் பிறகு அந்த கிழங்கு பல பாதைகளில் பயணிக்கும். சேகோ ஃபாக்டரிக்கு போன கிழங்கை உரிக்கறதுக்குண்ணே ஒரு பெரிய ஆள்படை இருக்கும். அவங்க அந்த தோலை உரிக்கும் அழகே அழகு. பேசிகிட்டே கடகடன்னு உரிப்பாங்க. தோலை சீவணும். பச்சைக்கிழங்கு கையிலே வழுக்கும். ஆனா கவனமா அதை பிடிச்சிகிட்டு சீவி எடுக்கணும். கூலி பெரும்பாலும் எடையைப் பொறுத்துதான். எத்தனை கிலோ உரிக்கறாங்களோ அதுக்கேத்த மாதிரி காசு. கிழங்கு சீசன்ல பள்ளிகூடத்துக்கு லீவு போட்டுட்டு கிழங்கு உரிக்கற வேலைக்கு போறதும் உண்டு. 

            பயணம் தொடரும் ….